பதிவு செய்த நாள்
31 ஜன2017
04:43
மும்பை : ‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் எடுக்க உள்ள நடவடிக்கைகள், இந்தியாவின் வளர்ச்சியை பெரியளவில் பாதிக்காது’ என, ஜப்பானைச் சேர்ந்த, ‘நோமுரா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2016ல், 7.1 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2016 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், நடப்பாண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.9 சதவீதமாக குறையும் என, முன் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உள்நாட்டில் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியை குறைக்கவும், உள்ளூரில் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதற்காக, ஏராளமான ஊக்கச்சலுகை திட்டங்களை, அவர் அறிவிப்பார் என, தெரிகிறது. மேலும், குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், எல்லை வரி, கூடுதல் வரி போன்ற வரிவிதிப்புகளை அமல்படுத்த உள்ளார்.அமெரிக்காவில், சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றவும், புதிய குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும், அவர் எடுக்கும் நடவடிக்கைகள், உலகளவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தும்.இத்தகைய செயல்பாடுகள், இந்தியாவை ஓரளவு பாதிக்கும் என்ற போதிலும், அதன் தாக்கம், பெரியளவில் இருக்காது. ஏனெனில், நாட்டின் மொத்த சரக்கு ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு, 15 சதவீதம் என்ற அளவிற்குத் தான் உள்ளது.
எல்லை வரி அல்லது இறக்குமதி கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகள், மருந்து, ஜவுளி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியை சற்று பாதிக்கும்.அதே சமயம், ‘எச் 1 பி’ விசா கட்டுப்பாடு, கட்டண உயர்வு ஆகியவை, இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களை பாதிக்கும்.அமெரிக்கா வழங்கும், ‘எச் 1 பி’ விசாவில், இந்திய நிறுவனங்கள், 86 சதவீதம் பெற்று வருவது தான் இதற்கு காரணம். இத்தகைய காரணிகளின் அடிப்படையில், நடப்பாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு, 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இருந்த போதிலும், நாட்டின் பணத் தட்டுப்பாடு குறைந்து, பணப்புழக்கம் மெல்ல சீராகி வருவதும், மக்களின் தேவை அதிகரித்திருப்பதும், பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் எனலாம். அதனால், நடப்பாண்டின், இரண்டாவது அரையாண்டிற்கு பின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்தை தாண்டவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|