பதிவு செய்த நாள்
01 பிப்2017
04:38
புதுடில்லி : ‘கடந்த, 2015க்கு முன் வரை, 180 சதவீதம் வளர்ச்சி கண்டு வந்த மின்னணு சில்லரை விற்பனை துறை, 2016ல், 12 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டு, 1,450 கோடி டாலராக உயர்ந்துள்ளது’ என, ‘ரெட்சீர்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:கடந்த ஆண்டு, ‘பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்களின் விற்பனை, ஏற்ற, இறக்கமின்றி, சீராக காணப்பட்டது. இதை ஈடுசெய்யும் விதத்தில், அமேசான் இந்தியா போன்ற வலைதள சந்தை நிறுவனங்களின் வளர்ச்சி இருந்தது.
பாதிப்புஇதன் காரணமாகவே, கடந்த ஆண்டு, மின்னணு சில்லரை விற்பனை துறையின் வளர்ச்சி பின்னடைவின்றி, மந்தமாக காணப்பட்டது. எனினும், 2016, மின்னணு சில்லரை விற்பனை துறையின் வளர்ச்சிக்கு, தடைக் கல்லான ஆண்டாகவே இருந்தது எனலாம். குறிப்பாக, வலைதள சந்தை நிறுவனங்கள் வழங்கி வந்த சலுகைகளுக்கு, அரசு விதித்த கட்டுப்பாடுகள்; பண மதிப்பு நீக்க நடவடிக்கை; புதிய வாடிக்கையாளர் சேர்க்கை குறைந்தது; நிறுவனங்கள் சந்தித்த நிதி இடர்பாடுகள் போன்றவை, பாதிப்பை ஏற்படுத்தின.
கடந்த, 2013 முதல், இத்துறையின் மொத்த வருவாய், ஆண்டுக்கு, மூன்று இலக்க வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தது; இது, 2015ல், 15 சதவீதமாக சரிவடைந்தது. இரு ஆண்டுகளாக, தொடர்ந்து, 100 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் வளர்ச்சி கண்ட, மின்னணு சில்லரை விற்பனை துறை, 2020ல், 8,000 கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை எட்ட வேண்டு மென்றால், அடுத்த நான்கு ஆண்டுகளில், இத்துறை, ஆண்டுக்கு, சராசரியாக, 45 சதவீதம் வளர்ச்சி காண வேண்டியது அவசியம். அதாவது, தற்போதுள்ளதை விட, நான்கு அல்லது ஐந்து மடங்கு வளர்ச்சி காண வேண்டும்; அதற்கான ஆற்றல், இத்துறைக்கு உள்ளது. இந்தாண்டு, மின்னணு சில்லரை விற்பனை துறையில், கடும் போட்டி நிலவும். சிறப்பாக செயல்படும் நிறுவனங்களே, வாடிக்கையாளர் தேர்வில், முதலிடம் பெறும்.
வளர்ச்சிஇத்தகைய போக்கு, இந்திய மின்னணு வணிகச் சந்தையை, வரும் ஆண்டுகளில் மாற்றி அமைக்கக் கூடியதாக இருக்கும். தொழில்நுட்பமும், இணைய பயன்பாடும், இந்தியாவின் மின்னணு சில்லரை விற்பனை துறையின் சீரிய வளர்ச்சிக்கு உதவும். வலைதளம் மூலம் பொருட்களை தேர்வு செய்து, அவற்றை கடைகளில் வாங்குவதை விட, வலைதளம் வாயிலாகவே பொருட்கள் வாங்குவோர் அதிகரித்து வருகின்றனர். பற்றாக்குறையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வரையறுக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பெற முடியும் என்ற சூழல் போன்றவையால், வாடிக்கையாளர்கள், கடைகளுக்கு செல்வதை தவிர்த்து, வலைதள சந்தை நிறுவனங்களை நாடுகின்றனர். இது, மின்னணு சில்லரை விற்பனை துறையின் வளர்ச்சிக்கு துணை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|