பதிவு செய்த நாள்
13 பிப்2017
05:12
பாலிசிதாரர்களின் நலன் காக்கும் வகையில், புதிய வரைவு நெறிமுறைகளை,இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டு கருத்துக்களை கோரியுள்ளது.
இம்மாத துவக்கத்தில், பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பாலிசிதாரர்களின் நலன் காப்பதற்கான வரைவு நெறிமுறைகளை வெளியிட்டது. ஏற்கனவே உள்ள, 2002 விதிமுறைகளுக்கு பதிலாக உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த வரைவு நெறிமுறைகள், பாலிசிதாரர்கள் நலன்கள் பாதுகாக்கப்படுவது, அவர்கள் நியாயமான சேவை பெறுவது, பாலிசி விற்பனையின் போது, தேவையான தகவல்களை பெறுவது ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது.இப்போது நடைமுறையில் உள்ள, விதிகளின் மேம்பட்ட வடிவமாக இந்த வரைவு நெறிமுறைகள் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக, கிளைம்களை பொறுத்தவரை வரவேற்கத்தக்க அம்சங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
15 நாள் அவகாசம்ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, தற்போது அமலில் உள்ள விதிமுறைகளின் படி, கிளைம் கோரிக்கை சமர்பிக்கப்பட்ட, 15 நாட்களுக்குள் நிறுவனம் ஆவணங்கள் கோருவது, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது போன்றவற்றை, ஒரே கட்டத்தில் முடித்துக்கொள்ள வேண்டும். இதில், வரைவு நெறிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், கிளைம்களை பைசல் செய்வதற்கான காலம், 30 நாட்களில் இருந்து, 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்கள் மற்றும் கேட்கப்பட்ட தகவல்கள் கிடைத்த, 15 நாட்களுக்குள் ஆயுள் காப்பீடு பாலிசி தொடர்பான கிளைம் தொகை வழங்கப்பட வேண்டும் அல்லது உரிய காரணங்களை விளக்கி, நிராகரிக்கப்பட வேண்டும்.
காப்பீடு நிறுவனம், ஒரு கிளைம் குறித்து மேற்கொண்டு விசாரிக்க விரும்பினால், தற்போது, ஆறு மாத காலம் எடுத்துக் கொள்ளலாம். ஆவணங்கள் கிடைக்கவில்லை என்பது போன்ற காரணங்களைக் கூறி, மேலும் நீட்டிக்கலாம். ஆனால், புதிய நெறிமுறைகளின் படி, ஆவணங்கள் கிடைத்த, 90 நாட்களுக்குள் இதை முடித்துக்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கிளைம்களை அவை சமர்ப்பிக்கப்பட்ட, 270 நாட்களுக்குள் பைசல் செய்ய வேண்டும். அதே போல, கிளைம் தொகை வழங்கப்பட வேண்டிய நிலையில், எந்த காரணத்தினாலோ தொகை வழங்கப்படாத நிலை இருந்தால், நிறுவனம் வங்கி வட்டியை விட, 2 சதவீதம் கூடுதலாக வட்டி வழங்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டை பொருத்தவரை, செட்டில்மென்ட் அதற்கான விதிகளுக்கு ஏற்ப அமையும். வீடு மற்றும் வாகனக் காப்பீடு தொடர்பான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
தகவல் விளக்கம்காப்பீடு நிறுவனங்கள், தங்கள் இயக்குனர் குழு ஏற்றுக்கொண்ட சேவை காரணிகளை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் இந்த வரைவு தெரிவிக்கிறது. பாலிசி குறித்து விளக்கப்படும் போது மற்றும் விற்பனை செய்யப்படும் போது, அதன் பலன்கள் தவறாக குறிப்பிடப்படாத வகையில், பாலிசியின் பலன்கள் அல்லது திரும்பி அளிக்கும் உரிமை ஆகிய தகவல்கள், தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்பதையும், இது உள்ளடக்கிஇருக்கிறது. புகார்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இவை, நுகர்வோர் நலன் காக்கும் வகையில் அமைந்திருந்தாலும் போதுமானதல்ல என, இத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பாலிசி தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்பதை கடந்து, பாலிசி குறித்த அனைத்து சிக்கலான தகவல்களும் கட்டுப்பாட்டாளர் அளவில் விவரிக்கப்பட்டு, ஏற்கப்படுவதோடு, அதன் பலன்கள் மற்றும் நிபந்தனைகள் எளிதாக புரியும் வகையில் விளக்கப்பட வேண்டும். பாலிசியின் முக்கிய அம்சங்கள், எளிதாக புரியும் வாசகங்களில், பிரதானமாக கொட்டை எழுத்துக்களில் அச்சடிக்கப்பட வேண்டும் என்றும், வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிசியை ரத்து செய்வதற்கான பிரி லுக் காலம் உள்ளிட்ட, முக்கிய அம்சங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், யுலிப் போன்ற பாலிசிகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள, சேமிப்பு பகுதி மீதான பலன் என்ன என்பதும் குறிப்பிடப்பட்டால், நன்றாக இருக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த வரைவு நெறிமுறைகள் குறித்து வரும், 15ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|