பதிவு செய்த நாள்
17 பிப்2017
04:49
புதுடில்லி: மத்திய அரசு, அனைத்து பொது துறை நிறுவனங்களும், ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவற்றை, அடுத்த, 2 – 3 ஆண்டுகளில், பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிர்வாக துறை இயக்குனர், நீரஜ் குப்தா கூறியதாவது: பொது துறையைச் சேர்ந்த, லாபகரமான நிறுவனங்கள் அனைத்தும், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட, அனுமதி வழங்கப்படும். இதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் விதிமுறைகளை பின்பற்றி, நிர்வாகச் செயல்பாடு களை ஒழுங்குபடுத்துமாறு, பொதுத் துறை நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான, தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை விபரங்கள், விதிமுறைப்படி, நிறுவனங்களின் இயக்குனர் குழுக்களை அமைத்தல்; விகிதாச்சாரப்படி, தனி இயக்குனர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, பொதுத் துறை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய பணிகளை முடிக்க, ஓராண்டு அல்லது இரு ஆண்டு கள் ஆகும். அதிகபட்சமாக, மூன்று ஆண்டுகளுக்குள், ‘செபி’ விதிமுறைகளை பின்பற்றி, பங்கு வெளியீடு மேற்கொள்வதற்கான தகுதியை, பொதுத் துறை நிறுவனங்கள் பெற்று விடும். பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதி, பொதுத் துறை நிறுவனங்களின் வர்த்தக விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும். அதனால், விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, மத்திய அரசிடம் நிதி கோருவது தவிர்க்கப்படும். அனைத்து அரசு துறைகளும், அவற்றின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை, பங்கு வெளியீட்டிற்கு தயார்படுத்தும்.
விற்றுமுதல், லாபம், நிகர சொத்து மதிப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், பங்கு வெளியீட்டிற்கான, பொதுத் துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்; இதற்கான விதிமுறைகள், விரைவில் வெளியிடப்படும். விதிமுறைகளை பூர்த்தி செய்த, தகுதியான பொதுத் துறை நிறுவனங்கள், ஆறு மாதங்களில், பங்கு வெளியீடு மேற்கொள்ளலாம். இந்த திட்டம், பொதுத் துறை நிறுவனங்கள் வெளிப்படையாக செயல்படவும், ஒழுங்கு முறையான நிர்வாக நடைமுறைகளுக்கும், சந்தையில், ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ளவும் துணை புரியும். அனைத்திற்கும் மேலாக, நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும், பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலுடன் தான் நடைபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2015 மார்ச் இறுதி நிலவரப்படி, பொதுத் துறை நிறுவனங்களின் எண்ணிக்கை, 298 ஆக உள்ளது. கடந்த, 2009 முதல், இதுவரை, பொதுத் துறையைச் சேர்ந்த, ஆறு நிறுவனங்கள் மட்டுமே, பங்குகளை வெளியிட்டுள்ளன. கடந்த, 2012ல், பொதுத் துறையைச் சேர்ந்த, நான்கு நிறுவனங்கள் மட்டுமே, பங்கு வெளியீட்டிற்கு அனுமதி பெற்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|