பதிவு செய்த நாள்
23 பிப்2017
20:40
புதுடில்லி : ‘நேரடி விற்பனை துறையின் வளர்ச்சி, 2024 – 25ம் நிதிஆண்டில், தற்போது உள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ஒரு நிறுவனம், அதன் தயாரிப்பு களை, மொத்த வியாபாரிகள், சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோர் மூலம் விற்காமல், நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வது, நேரடி விற்பனை முறை எனப்படுகிறது. இந்தியாவில், ‘ஆம்வே, ஓரிபிளேம், ஏவொன், ஹெர்பலைப்’ போன்ற பல நிறுவனங்கள், நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
வளர்ச்சிஇந்திய நேரடி விற்பனை நிறுவனங்கள் கூட்டமைப்பு, பி.எச்.டி., வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு இணைந்து, நேரடி விற்பனை துறையின் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளன.
அதன் விபரம்:கடந்த, 2015 – 16ம் நிதிஆண்டில், நேரடி விற்பனை துறையின் ஒட்டுமொத்த விற்பனை, 4.4 சதவீதம் அதிகரித்து, 8,308.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; இது, 2014 – 15ல், 7,958.30 கோடி ரூபாயாக இருந்தது. எனினும், இதற்கு முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடும் போது, இத்துறையின் வளர்ச்சி விகிதம், மிகக் குறைவாகவே உள்ளது. இதற்கு, நேரடி விற்பனை துறை விதிமுறைகளில் தெளிவின்மை; உரிமம் பெறுவதில் கால தாமதம்; சில நிறுவனங்களின் முறைகேடான வர்த்தகம். அதனால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்தது போன்ற காரணங்களை கூறலாம். மேலும், பாரம்பரிய வர்த்தகத்தை விட, நேரடி விற்பனைக்கு அதிகம் செலவிட வேண்டிய நிலையும், பொருளாதார மந்த நிலையால், மக்களின் தேவைகள் குறைந்ததும், துறையின் வளர்ச்சி சரிய வழிவகுத்தது.
விழிப்புணர்வுஇத்தகைய சூழலில், நேரடி விற்பனை துறையின் சீரிய வளர்ச்சிக்கு துணை புரியும் வகையில், மத்திய அரசு, 2016 செப்டம்பரில், ஒழுங்குமுறை கொள்கையை வெளியிட்டது. இது, நேரடி விற்பனை துறையில் காணப்பட்ட குழப்பங்களுக்கு எல்லாம் முடிவு கட்டி, வளர்ச்சிக்கு வழிகாட்டி உள்ளது. இதனால், நேரடி விற்பனை என்ற பெயரில் நடைபெற்று வந்த, சட்ட விரோத விற்பனை தடுக்கப்பட்டு உள்ளது. நேரடி விற்பனை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது. இத்தகைய அம்சங்கள் காரணமாக, நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் விற்பனை, சிறப்பாக வளர்ச்சி கண்டு, 2024 – 25ம் நிதியாண்டில், 25,826 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
முதலிடம் கடந்த, 2015 – 16ம் நிதிஆண்டில், ஒட்டுமொத்த நேரடி விற்பனையில், வடக்கு பிராந்தியம், 30 சதவீத பங்களிப்புடன், 2,493 கோடி ரூபாய் திரட்டி முதலிடத்தை பிடித்து உள்ளது.தென் பிராந்தியம், 21 சதவீத பங்களிப்புடன், 1,579 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்கள், முறையே, 19 சதவீதம் மற்றும் 17 சதவீத விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|