பதிவு செய்த நாள்
28 பிப்2017
23:52
வாஷிங்டன் : ‘‘புதிய கண்டுபிடிப்புகளுக்கு தேவைப்படும் திறமையான வல்லுனர்களின் வருகையை, அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்க்கவில்லை,’’ என, அமெரிக்காவில், டிராக்டர் விற்பனையில் ஈடுபட்டு வரும், மகிந்திரா யு.எஸ்., நிறுவனத்தின் தலைவர் மணி ஐயர் தெரிவித்து உள்ளார்.
டொனால்டு டிரம்ப், உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், வெளிநாட்டினருக்கான, ‘எச்1 பி’ விசா கட்டணத்தை, இரு மடங்காக உயர்த்தி உள்ளார். இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் உள்ள, இந்திய, ஐ.டி., நிறுவனங்கள் பாதிக்கப்படும். அவை, இந்தியாவில் உள்ள, தாய் நிறுவனங்களில் இருந்து வல்லுனர்களை வரவழைத்து, பணிகளை முடிக்க, அதிகம் செலவிட நேரிடும். அதனால், அமெரிக்காவில் உள்ள, இந்தியா உள்ளிட்ட, இதர நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், உள்நாட்டு வல்லுனர்களை பணிக்கு அமர்த்த வேண்டிய நிலைக்கு ஆளாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, வாஷிங்டனில், செய்தியாளர்களிடம் மணி ஐயர் கூறியதாவது: டொனால்டு டிரம்ப், திறமையான வல்லுனர்களின் குடியேற்றத்திற்கு எதிரானவர் அல்ல. அவர், யாரும் அமெரிக்காவில் குடியேற வேண்டாம் என, கூறுவதாகவும் நான் நினைக்கவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு தேவையான வல்லுனர்கள் தான், அவருக்கு தேவை. இந்தியாவில், அத்தகைய அறிவியல் வல்லுனர்கள் ஏராளமாக உள்ளனர். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்திய நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.
அதே சமயம், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், பணிகளுக்கு வெளிநாட்டினரை சார்ந்திராமல், உள்நாட்டினரை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவில், குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்தும் போது, உள்நாட்டு பொருளாதாரத்திற்கு, எந்த வகையில் கூடுதல் பங்களிப்பை வழங்க முடியும் என யோசித்து, அதன்படி வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால், குடியேற்றம், ‘எச்1 பி’ விசா உள்ளிட்டவை தொடர்பாக, எந்த கேள்வியும் எழாது. எந்த நாடும், உள்நாட்டு வேலைவாய்ப்பை இழக்க விரும்பாது. அதனால், டிரம்ப், உள்நாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக எடுத்துள்ள கொள்கை நிலைப்பாடு, சரியானது தான் என்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
வர்த்தக சூழலை மேம்படுத்த முயற்சிஅமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர், வர்த்தக சூழலை மேம்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளனர். டிரம்ப், வணிக பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால், பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, கட்டுப்பாடுகளை நீக்கி, வரிகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். -மணி ஐயர், தலைவர், மகிந்திரா யு.எஸ்., நிறுவனம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|