பதிவு செய்த நாள்
07 மார்2017
05:29
மும்பை : ‘சர்வதேச அளவில், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதால், அவற்றின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் குறையும்’ என, டன் அண்ட் பிராட்ஸ்டீட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உணவு தானியங்கள் ஏற்றுமதியில், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பங்கு, 11.3 சதவீதமாக இருந்தது. இதை, 2018 – 19ம் நிதியாண்டில், 20 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்நிலையில், கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பொருளாதார மந்த நிலையால், உணவுப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது. அதனால், கடந்த இரு ஆண்டுகளாக, வேளாண் துறையை விஞ்சி, உணவு பதப்படுத்தல் துறை, வளர்ச்சி கண்ட போதிலும், ஏற்றுமதியில் பின்தங்கி உள்ளது. எனினும், மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கான, பதப்படுத்தப்பட்ட மாமிசம் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது. தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான, இந்தியாவின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடைக்கற்களாக உள்ளன.
வேளாண் சாகுபடியிலும், விளை பொருட்கள் பராமரிப்பிலும், அதிகளவிலான உணவு தானியங்களை, இந்தியா இழக்கிறது. போதுமான குளிர் பதன கிடங்கு வசதி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையின் வளர்ச்சி வேகம் குறைவாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|