பதிவு செய்த நாள்
09 மார்2017
00:00
மும்பை : ‘இந்திய ஓட்டல் அறைகளின் சராசரி வாடகை வருவாய், வரும், 2017 – 18ம் நிதியாண்டில், 9 சதவீதம் உயரும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவில், ஓட்டல் அறைகளுக்கான தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் ஓட்டல்களில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரீமியம் அறைகள் அமைய உள்ளன. அடுத்த நான்கு ஆண்டு களில், இந்த ஓட்டல்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, அறைகள் பயன்பாட்டிற்கு தயாராகி விடும். இதையடுத்து, 2020ல், நாட்டின் முக்கிய, 12 நகரங்களில் உள்ள ஓட்டல்களில், பிரீமியம் அறைகளின் எண்ணிக்கை, 1 லட்சத்திற்கும் அதிகமாக உயரும். இதில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், மும்பை தவிர்த்து, குறிப்பாக, பெங்களூரு, கோல்கட்டா நகரங்களில், பெரும்பான்மையான பிரீமியம் அறைகள் பயன்பாட்டிற்கு வரும்.
பெருகி வரும் ஓட்டல் அறைகளுக்கு ஏற்ப, அவற்றின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்தியா, பல்வேறு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால், இந்தியாவிற்கு வெளிநாட்டு தொழிலதிபர்கள், நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், வர்த்தகர்கள் ஆகியோரின் வருகை அதிகரித்துள்ளது. அத்துடன், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால், ஓட்டல் அறைகளின் பயன்பாடு மற்றும் தேவை உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், ஓட்டல் அறைகளின் சராசரி வாடகை மற்றும் பயன்பாடு, தலா, 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது, முந்தைய, 3 – 4 சதவீத மதிப்பீட்டை விட குறைவாகும். 2016 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், ஒருசில நகரங்களில், ஓட்டல் அறைகளுக்கான தேவை குறைந்து இருந்தது. எனினும், நாடு தழுவிய அளவில், ஓட்டல் அறைகளின் பயன்பாடு மற்றும் சராசரி வாடகை கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில், மதிப்பீட்டு காலத்தில், அறை வாடகை வாயிலான வருவாய், 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
பண மதிப்பு நீக்கத்தால், நீண்ட கால அளவில் கிடைக்க உள்ள பயன்களும், ஜூலையில் அறிமுகமாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரியும், சுற்றுலா துறை உட்பட, மொத்த உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஓட்டல் அறைகளின் சராசரி வருவாய் வளர்ச்சிக்கு துணை புரியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வரும் நிதியாண்டில், 5 சிறப்பு சுற்றுலா மண்டலங்கள் அமைக்கப்படும்; ‘வியத்தகு இந்தியா – 2’ பிரசார திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என, மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டங்கள், ஓட்டல் துறையின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும்.-சுப்ரதா ராய், மூத்த துணைத் தலைவர், ‘இக்ரா’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|