பதிவு செய்த நாள்
10 மார்2017
23:44
சென்னை : ‘அந்தமான் தீவுகளில், தொழில் துவங்க வாருங்கள்; அங்கு, அரசியல்வாதிகளுக்கு கமிஷன் தர தேவையில்லை’ என, அந்தமான் யூனியன் பிரதேசம், தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னையில், ‘அந்தமான் தீவுகள்: சிறப்பான அமைவிடம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கம் நடந்தது. ‘பாரத் நிதி’ என்ற அமைப்பு நடத்திய இக்கருத்தரங்கில், அந்தமான் துணை நிலை கவர்னர் ஜக்திஷ் முகி பேசியதாவது: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தக வாய்ப்புகளை, இந்தியா பெருக்குவதற்கு, அந்தமான் உதவிகரமாக இருக்கும்; இப்பிராந்தியத்தில், சீன ஆதிக்கத்தை தடுக்கவும் உதவும். இங்கு, மாலத்தீவுகள், செஷல்ஸ் போன்ற நாடுகளை விட, அதிக மக்கள் வாழ்கின்றனர். இயற்கை எழிலும் நிறைந்துள்ளதால், அந்த நாடுகளை விட, சுற்றுலாவில் சிறந்து விளங்க வாய்ப்பு உள்ளது. மேலும், கேரளாவிற்கு அடுத்த படியாக, அதிக கல்வியறிவு, தனிநபர் வருமானம், துாய்மையான சூழல் போன்ற காரணங்களால், முதலீட்டுக்கு உகந்த இடமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
அந்தமான் எம்.பி., விஷ்ணு பாத ராய் பேசியதாவது: அந்தமானில், நிலப்பரப்பு அதிகம் என்பதால், 100 சிங்கப்பூர்களை அங்கு உருவாக்கலாம். அங்கு, தமிழர்கள் மிக அதிகம். ஒரு குட்டி இந்தியா போல், அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அங்கு அரசியல்வாதிகள், கமிஷன் கேட்கமாட்டர்; சட்டம் – ஒழுங்கு பிரச்னை கிடையாது. எனவே, தொழில் துவங்க வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதர ராவ் கூறுகையில், ‘‘அந்தமான் வழியாக, சோழ மன்னர்கள் கடல் கடந்து வென்றனர். இந்தியாவின் நுழைவாயில் போன்ற அதன் முக்கியத்துவத்தை, மோடி உணர்ந்துள்ளார். ராணுவ தளவாடங்கள் தயாரிக்க, அது பொருத்தமான இடம்,’’ என்றார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘பாரத் நிதி’ தேசிய ஒருங்கிணைப்பாளர் அனுாப் கைப்பள்ளி உள்ளிட்டோர் பேசினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|