பதிவு செய்த நாள்
11 மார்2017
16:22
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், முதல், 11 மாதங்களில், நேரடி மற்றும் மறைமுக வரி வசூல், முந்தைய ஆண்டை விட அதிகரித்து உள்ளது.
இது குறித்து நிதியமைச்சகம் கூறியுள்ளதாவது: நடப்பு, 2016-17ம் நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி, நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் இலக்கு, 16.99 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2016 ஏப்ரல் முதல், இந்த ஆண்டு, பிப்ரவரி இறுதி வரையில், 13.89 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 81.5 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, நேரடி வரி வசூல், 10.7 சதவீதமும், மறைமுக வரி வசூல், 22.2 சதவீதமும் உயர்ந்துள்ளது. நேரடி வரி வசூல், 6.17 லட்சம் கோடி ரூபாயாகவும், மறைமுக வரி வசூல், 7.72 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.மறைமுக வரிப் பிரிவில், தொழில் வளர்ச்சியை குறிக்கும் வகையில், முந்தைய ஆண்டை விட, 36.2 சதவீத வளர்ச்சியுடன், 3.45 லட்சம் கோடி ரூபாய் கலால் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. சேவை வரி வசூல், 20.8 சதவீத வளர்ச்சியுடன், 2.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 5.2 சதவீத வளர்ச்சியுடன் சுங்க வரி வசூல், 2.05 லட்சம் கோடி ரூபாயாகும். நேரடி வரிப் பிரிவிலும் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கான வருமான வரி வசூல், முந்தைய ஆண்டை விட, 11.9 சதவீதம் உயர்துள்ளது. அதுபோல், தனிநபர் வருமான வரி வசூல், 20.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|