பதிவு செய்த நாள்
16 மார்2017
00:40
மும்பை : பல முனை வரிகளை ஒழித்து, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வழிவகுக்கும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1ல் அமலுக்கு வர உள்ளது.
இதனால், கிடங்குகள், தொழிற்கூடங்கள், வினியோக மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, தொழில் ரியல் எஸ்டேட் துறை, சிறப்பான எழுச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, பெரிய கிடங்குகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்களுக்கு ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.பெரிய நிறுவனங்கள், ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலத்திற்கு சரக்குகளை அனுப்பும் போது, பலமுனை வரிகளை செலுத்த வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, பல நிறுவனங்கள், அனைத்து நகரங்களிலும் சிறிய கிடங்குகளை வைத்துள்ளன.
தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, தொழில் நகரமான ஓசூர், கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. உதாரணமாக, பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 30 கி.மீ., துாரத்தில் உள்ள ஓசூருக்கு சரக்கு அனுப்பினால், மத்திய விற்பனை வரி, நுழைவு வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த வேண்டும்.இதை தவிர்க்க, அந்நிறுவனம், சென்னையில் உள்ள அதன் கிடங்கில் இருந்து, சரக்கை, ஓசூருக்கு அனுப்புகிறது. ஒருபுறம் வரிச் செலவு குறைந்தாலும், அந்நிறுவனத்திற்கு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது.
ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தால், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு இருக்கும். அதனால், நிறுவனங்கள், அனைத்து மாநிலங்களிலும், சிறிய கிடங்குகளை அமைப்பதற்கு பதிலாக, ஒரே இடத்தில் பெரிய கிடங்கை அமைத்து, அங்கிருந்து, பல்வேறு மாநிலங்களுக்கு சரக்குகளை சப்ளை செய்ய முடியும்.அத்துடன், கிடங்குகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, சரக்குகளை சேமிக்கவும், வினியோகிக்கவும், மூன்றாம் நபரின் கிடங்குகளை பயன்படுத்தும் சூழல் உருவாகும். இத்தகைய பெரிய கிடங்குகளை அமைப்பதன் மூலம், கட்டுமான நிறுவனங்களுக்கு, குறைந்த முதலீட்டில், நிலையான வருவாய் கிடைக்கும்.
கட்டுமான நிறுவனங்கள் கூட்டமைப்பான கிரெடாய், 2016 டிசம்பரில், கிடங்கு, மின் வணிகம், மருந்து, நுகர்பொருள் உள்ளிட்ட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது.அதில், 65 சதவீதத்தினர், ஜி.எஸ்.டி.,யால், ஒட்டுமொத்த வியாபாரம் நன்கு இருக்கும் என, தெரிவித்து உள்ளனர். கிடங்கு செலவுகள் குறையும் என, 45 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நடைமுறை செலவுகள் குறையும் என, 42 சதவீதத்தினர் கூறியுள்ளனர். சரக்கு போக்குவரத்து மற்றும் கிடங்கு சேவையில், 74 சதவீத நிறுவனங்கள், ஓராண்டிற்குள், புதிய வரிக்கான மாற்றங்களை செய்து முடித்துவிட முடியும் என, நம்பிக்கை தெரிவித்து உள்ளன.
‘சிறிய கட்டுமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயரவும், அவை, பெரிய நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக செயல்படவும், சொத்துகள் மீதான வருவாய்க்கும், ஜி.எஸ்.டி., உதவும்’- ‘கிரெடாய்’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|