பதிவு செய்த நாள்
20 மார்2017
03:55
இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இணையம் மூலம் காப்பீடு விற்பனை செய்வதற்கான, புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
காப்பீடு துறைக்கான டிஜிட்டல் மேடையை உருவாக்கும் வகையில், இணையம் மூலம் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்வதற்கான, புதிய விதிமுறைகளை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ளது. இ–காமர்ஸ் முறை மூலம் நிதிச்சேவைகளை மேலும் பரவலாக்க முடியும் என கருதப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், இணையம் மூலம் காப்பீட்டு திட்டங்களை வழங்குவதற்கான வரைவு நெறிமுறைகளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டு கருத்துக்களை கேட்டிருந்தது. இந்நிலையில், புதிய நெறிமுறைகளை, மார்ச் 9ம் தேதி, சுற்றறிக்கை வாயிலாக ஆணையம் வெளியிட்டுள்ளது.இணையத்தில் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்வதற்கான விதிமுறைகளை முறைப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.
அனுமதி வேண்டும்இதன்படி, டிஜிட்டல் மேடையில் காப்பீடு திட்டங்களை வழங்க விரும்பும் அமைப்புகள், காப்பீடு சுய வலைப்பின்னல் மேடை (ஐ.எஸ்.என்.பி.,) அமைத்து, விதிகளை பின்பற்றி சேவை வழங்கலாம். இந்த டிஜிட்டல் மேடை என்பது இணையதளமாகவோ, மொபைல் செயலியாகவோ அல்லது இரண்டும் இணைந்ததாகவோ இருக்கலாம்.ஏற்கனவே இணையதளம் மூலம் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்து வரும் காப்பீடு நிறுவனங்கள், இடைமுக நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு திரட்டி சேவைகள், மூன்று மாத காலத்திற்குள் ஐ.எஸ்.என்.பி.,க்கான அனுமதி பெற வேண்டும். அவை புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஐ.எஸ்.என்.பி., இணையதளம் காப்பீடு விற்பனை மற்றும் சேவை தொடர்பாக பயனாளிகள் எதிர்பார்க்க கூடிய அனைத்து விபரங்களையும் கொண்டிருக்கும்.
காப்பீட்டில், இ–காமர்ஸ் வசதியை முறைப்படுத்துவதற்கான வரைவு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட போது, ‘பிளிப்கார்ட், அமேசான்’ உள்ளிட்ட மின்வணிக தளங்களும் பாலிசிகளை விற்பனை செய்ய, வழி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காப்பீடு வசதியின் வீச்சை அதிகமாக்க இது உதவும் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, காப்பீடு விற்பனை அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டுமே இதில் ஈடுபட முடியும். காப்பீடு நிறுவனங்கள், முகவர்கள், வினியோக நிறுவனங்கள் மற்றும் காப்பீடு ஆணையம் அங்கீகரித்த நிறுவனங்கள் மட்டுமே இணையம் மூலம் பாலிசிகளை விற்பனை செய்ய முடியும்.
விலை குறையுமா?அங்கீகாரம் பெறாத நிறுவனம் இணையம் மூலம் காப்பீடு விற்பனை செய்வது விதி மீறலாக கருதப்படும். அது மட்டும் அல்லாமல், நிறுவனங்கள் பிற தளங்களில் இருந்து இணைய போக்குவரத்து மூலம் செய்யப்படும் பரிந்துரைகளை ஏற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிசி கட்டணத்தை பொறுத்தவரை, ஐ.எஸ்.என்.பி., மூலம் அதாவது, இணையம் மூலம் வழங்கப்படும் பாலிசிகளுக்கு மாறுபட்ட விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம். எனினும், இந்த தொகையானது நிறுவனம் மற்றும் தரகர் உள்ளிட்ட பிற அமைப்புகள் வழங்கும் சேவைக்கு ஒன்றாகவே இருக்கும். முகவர் ஒருவர் பலகை கணினி வழியே பாலிசியை விற்பனை செய்தாலும் அதற்கான தொகை ஒன்றாகவே இருக்கும். மேலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் கேஷ்பேக் போன்ற சலுகைகள் அளிக்கப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காசோலை அல்லது ரொக்கமாகவும் பணம் செலுத்தும் வசதி அளிக்கப்படும்.
டிஜிட்டல் மேடைவிதிமுறைகளின் படி, இ – இன்சூரன்ஸ் கணக்கு எனப்படும் மின்னணு காப்பீடு கணக்கு வசதி அவசியம். இந்த வசதி டிஜிட்டல் வடிவில் பாலிசிகளை பெற்றுக்கொள்ள வழி செய்கிறது. பாலிசி விற்பனை செய்த, 15 நாட்களுக்குள் இத்தகைய கணக்கை பெற வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பாலிசிகளை வாங்க பதிவு செய்து கொண்ட இ–மெயில் முகவரி அல்லது மொபைல்போன் எண் தேவை. எனினும், இது தொடர்பாக மேலும் தெளிவு தேவைப்படுவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பாலிசி வாங்குவதற்கு தேவையான, கே.ஒய்.சி., நடைமுறையை மின்னணு, கே.ஒய்.சி., மூலம் மேற்கொள்ளலாம். ஆதார் அல்லது மின்னணு பான் வசதியை இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இணையம் மூலம் காப்பீட்டு திட்டங்களை பெறும் முறையில், இந்த விதிமுறைகள் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|