பதிவு செய்த நாள்
20 மார்2017
04:32
பா.ஜ.வின் உத்தர பிரதேச வெற்றியை, பங்கு சந்தை இந்த வாரம் முழுவதும் கொண்டாடியது. அமெரிக்க பெடெரல் ரிசர்வ் எடுத்த, வட்டி விகித கூட்டல் முடிவும், சந்தையின் போக்கை அதிகம் மாற்றவில்லை. அமெரிக்காவில் வட்டி விகிதம் கூடிய நிலையில், நம் பங்கு சந்தையின் இந்த அபரிமிதமான போக்கு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தனக்கு சாதகமான செய்திகளுக்கு ஏற்றம் கொள்வதும், பாதகமான செய்திகளை புறம் தள்ளுவதும், சந்தையில் அச்சமற்ற நிலை இருப்பதற்கான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு, தேசிய பங்கு சந்தையின், விக்ஸ் (VIX) என்ற குறியீடு ஒரு முக்கிய சான்று. விக்ஸ் என்பது சந்தையில் நிலவும் அச்சம் மற்றும் பேராசையை வெளிப்படுத்தும், உலகளாவிய ஓர் அளவுகோல். இந்த விக்ஸ் என்பது எண்களாலான குறியீடு. சந்தையில் ஒவ்வொரு வினாடியும், முதலீட்டாளர்களின் நகர்வுகளை உன்னிப்பாக கவனிப்பதன் வெளிப்பாடு தான் இந்த விக்ஸ். தற்போது, இந்தியா விக்ஸ் 11.8525 ஆக உள்ளது. இதன், 52 வார குறைந்த பட்ச அளவு, 10.3875. சந்தையில் அச்சம் குறைவாக இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.
சவால்பொதுவாக, இத்தகைய சூழல் சந்தையில் அதிக நேரம் நிலைப்பது இல்லை. அப்படி நிலைத்தால், அது சந்தையின் கிடுகிடு ஏற்றத்தில் முடியும். வரும் வாரத்தில் இந்த குறியீடு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பெடெரல் ரிசர்வ் இந்த ஆண்டு தொடர்ந்து இருமுறை வட்டி விகித ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற அறிகுறி நமக்கு கிடைத்திருக்கிறது. இது அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் காட்டப்படும் நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது. உலக முதலீடுகள், அமெரிக்காவிற்கு அதிகம் ஒதுக்கப்படும் சூழல் நிச்சயம் உருவாகும். அமெரிக்காவில் வட்டி விகிதம் கூடும்போது, அது உலகம் தழுவிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பிற நாடுகளும் தங்கள் வட்டி விகிதம் சார்ந்த கொள்கைகளை தங்கள் முதலீட்டு தேவைகளை பாதிக்காத வண்ணம் அமைக்கும் நிலைக்கு தள்ளப்படும். இது உலகம் தழுவிய மாற்றங்களை ஏற்படுத்தும். நம் நாட்டில் வட்டி விகித குறைப்புக்கு, அமெரிக்க கொள்கை மாற்றம் சவாலாக அமையும்.
சூழல்எனினும், இந்திய முதலீடுகளும் தொடர்ந்து வளர வேண்டுமெனில், தொடர்ந்து வெளிவரும் நம் வளர்ச்சி குறியீடுகள் சிறப்பாக அமைய வேண்டும். இந்த வாரம் வெளிவந்த நிறுவனங்களின் முன்வரி வசூல் சற்று மந்தமாகவே அமைந்துள்ளது. மொத்தவிலை பணவீக்கமும் அதிகமாகவே நிலவுகிறது. மேலும், ஜி.எஸ்.டி., சார்ந்த, ஐந்து வரிச்சட்டங்கள் நிறைவேறி உள்ளன. இந்த தகவல்களின் மேல் சந்தை அதிக ஆய்வு செய்யவில்லை. வரும் வாரங்களில் நிறுவனங்கள் சார்ந்த ஆய்வுகளும், பாதிப்புகளும் வெளிவரும். அந்த தகவல்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை எப்படி பாதிக்கின்றன என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துணர்வது அவசியம்.
அன்னிய முதலீட்டாளர்கள் புதிய வேகத்துடன் நம் சந்தை பக்கம் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இந்த வேகம் நிலைக்க தேவையான பொருளாதார சூழல் விரைவில் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால், சந்தையின் தற்போதைய ஏற்றம் தொடர்வது கடினம் என்றே தோன்றுகிறது. ஆனாலும், தொடர்ந்து, சந்தைக்கு பணவரத்து மிக அதிகமாக உள்ள சூழலில், சந்தையில் பெரிய சரிவுக்கான சூழல் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|