பதிவு செய்த நாள்
20 மார்2017
04:33
மும்பை : மத்திய அரசின் தங்கம் டிபாசிட் திட்டம், மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தள்ளாடி வருகிறது.
தங்கம் இறக்குமதியில், சீனாவிற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.இங்கு, ஆண்டுக்கு, சராசரியாக, 800 டன் தங்கம் இறக்குமதி ஆனதால், நாட்டின் கடன் சுமை அதிகரித்து வந்தது. இதை குறைப்பதற்காக, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, 2015, நவம்பரில், தங்கம் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில், 25 ஆயிரம் டன் தங்கம், குடும்பங்கள் மற்றும் கோவில்களில் முடங்கியுள்ளதாக, ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. வீடுகளில் மட்டும், 24 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஓரளவை சந்தைக்கு கொண்டு வர, தங்க டிபாசிட் திட்டம் உதவும்; அதன் மூலம், தங்கம் புழக்கம் அதிகரித்து, இறக்குமதி குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது.
விருப்பமின்மைஇத்திட்டத்தின் கீழ், வங்கியில் 1 – 15 ஆண்டுகள் வரை, டிபாசிட் செய்யப்படும் தங்க நகைகளுக்கு, 2.5 சதவீத ஆண்டு வட்டியும், வட்டி வருவாய்க்கு வருமான வரி, மூலதன வரி விலக்கு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. டிபாசிட் முதிர்வின்போது, தங்கத்தின் மதிப்பை பொறுத்து, பணமாகவோ, தங்கமாகவோ பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. இத்தகைய சலுகைகள் அளித்தும், கடந்த 16 மாதங்களில், கோவில்கள் மற்றும் குடும்பங்களில் இருந்து, 7 டன் தங்கம் மட்டுமே, வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதிலும், கோவில்கள் தான், பெரும்பான்மை தங்கத்தை டிபாசிட் செய்துள்ளன.
இந்த திட்டம் மக்களின் வரவேற்பை இழந்ததற்கு, பல காரணங்கள் உள்ளன. மக்கள், தங்களின் பாரம்பரிய தங்க நகைகள், வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டு, உருக்கப்படுவதை விரும்பவில்லை. இத்திட்டத்தில், தங்கத்தின் தரத்தை சோதிப்பது, உருக்குவது போன்றவற்றுக்கான செலவு, டிபாசிட் தாரர்களின் தலையில் விழுகிறது. மேலும், வங்கியில் டிபாசிட் பணத்திற்கு, 7 – 8 சதவீதம் வட்டி கிடைக்கையில், 2.5 சதவீத வட்டி மற்றும் வரிச் சலுகைகளுக்காக, தங்கத்தை டிபாசிட் செய்யவும் மக்கள் விரும்புவதில்லை.
வங்கிகள் அணுகுமுறைஇது ஒருபுறம் என்றால், வங்கிகளும், தங்க நகை கடனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, தங்க டிபாசிட் திட்டத்திற்கு கொடுக்காமல் உள்ளன.அதற்கான நடைமுறைகளை தெளிவாக அறியாததால், வங்கி ஊழியர்கள், தங்க டிபாசிட் திட்டமே தங்கள் கிளையில் இல்லை என, டிபாசிட் செய்ய வருவோரை திருப்பி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. அதனால், தங்க டிபாசிட் திட்டத்தை, மறுஆய்வுசெய்து, கவர்ச்சிகரமான சலுகைகளுடன் அறிமுகப்படுத்தினால் மட்டுமே, மக்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஈர்க்க முடியும். அதன் மூலம், எதிர்பார்த்த அளவிற்கு, தங்கம் இறக்குமதி குறையும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|