பதிவு செய்த நாள்
27 மார்2017
03:13

கச்சா எண்ணெய்
இம்மாத ஆரம்பம் முதலே கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தது. அதாவது, 10 சதவீதம் விலை குறைந்து, 48.12 டாலராக வர்த்தகமாகிறது. (பிப்ரவரி மாதம் இதன் விலை, பீப்பாய் 55 டாலர் வரை உயர்ந்து காணப்பட்டது.) சர்வதேச சந்தையில் வரவு அதிகரிப்பு இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஷேல் ஆயில் எனப்படும் பாறைகளுக்கிடையே ஆழ்குழாய் அமைத்து எடுக்கும் எண்ணெய் உற்பத்தி உயர்ந்து, தினசரி 4,17,000 பீப்பாய்களாக அதிகரித்ததும் விலை வீழ்ச்சிக்கு காரணமாகும்.
கடந்த ஆண்டு, நவம்பரில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அடங்கிய, ஒபெக் கூட்டமைப்பு, எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 1.8 மில்லியன் பேரல்களாக குறைத்து, விலையை ஏற்ற தீர்மானித்தது. ஆனால், கூட்டமைப்பில் உள்ள 11 நாடுகளில், 8 நாடுகள் அதை சரி வர அமல்படுத்தவில்லை என்பதாலும், ஈரான் மற்றும் ஈராக் நாடுகள் தங்களது தினசரி இலக்கைவிட அதிகமாக உற்பத்தி செய்ததாலும், சந்தையில் வரவு அதிகரித்தது. இது சவுதி அரேபியாவை மனமுடையச் செய்தது.அடுத்து, ஒபெக் மற்றும் ஒபெக் அல்லாத நாடுகள் கூட்டமைப்பின் கூட்டம் வரும் மே, 23ல் நடைபெற உள்ளது. இதில், நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து, குவைத், அல்ஜீரியா, வெனிசுலா, ரஷ்யா, ஓமன் ஆகிய ஐந்து நாடுகள் கலந்து ஆலோசித்து உள்ளன.
அமெரிக்க அரசு, புதிய எண்ணெய் வழி தடங்களுக்கு அனுமதி வழங்க இருக்கிறது. கனடா வழியாக அமெரிக்காவிற்கு எண்ணெய் கொண்டு வரும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. மேலும், எண்ணெய் ஆழ்குழாய்களை அதிகரித்துள்ளது. தற்போது, 631 குழாய்கள் இயங்குகின்றன. இவ்வாறாக சந்தையில் ஏற்பட்டுள்ள வரவு அதிகரிப்பினாலும், அமெரிக்காவின் ஐ.இ.ஏ., மற்றும் இ.ஐ.ஏ., அமைப்புகள் வாரம் இருமுறை வெளியிடும் கணக்கீட்டில் கச்சா எண்ணெய் தேக்கம் அதிகரிப்பின் காரணமாகவும், இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் இந்நிலை நீடிக்குமானால் மேலும் விலை சரிவு ஏற்படும்.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (1 பீப்பாய்) ஏப்., 17சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,070 2,950 3,210 3,340என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 47.00 45.50 49.50 54.30
தங்கம், வெள்ளி
கடந்த இரு வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிது ஏற்றம் காணப்பட்டது. அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு கொண்டு வந்த சட்ட நடைமுறை மற்றும் கொள்கைகள், குறிப்பாக மருத்துவ காப்பு திட்டம் அக்கட்சியில் உட்பூசலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தது. இதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை சிறிது உயர்ந்தது.
மேலும், கடந்த வாரம் அமெரிக்கா தன் வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதன்பின், நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தாமதமாக எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இவ்வாண்டின் வட்டி விகித உயர்வு தாமதமாக நடக்கும் என அறியப்பட்டது. இதன் விளைவாகவும் தங்கம் விலை உயர்ந்தது.வேர்ல்டு கோல்டு கவுன்சில் கணக்கீட்டின்படி, 2017ம் ஆண்டு இந்திய தங்க இறக்குமதி, 680 – 750 டன்னாக இருக்கும். கடந்த, 2016ம் ஆண்டு இறக்குமதி வெறும் 514 டன்னாகும்.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (ஜூன் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 28,660 28,420 29,050 29,400காம்எக்ஸ் (டாலர்) 1,238 1,225 1,255 1,264
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (மே 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 41,050 40,680 42,100 42,690காம்எக்ஸ் (டாலர்) 17.50 17.12 17.85 18.10
ஏலக்காய்
ஏலக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. முதலிடம் மத்திய அமெரிக்காவிலுள்ள கவுதமாலா ஆகும். இந்நாடு உற்பத்தி செய்யும் ஏலக்காய் அளவு உலகளவில் உற்பத்தி ஆவதில் 60 – 65 சதவீதம் ஆகும்.இந்தியாவில் உற்பத்தியாகும் ஏலக்காயில், 90 சதவீதம் கேரள மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. கடந்த 2016ம் ஆண்டில் உற்பத்தி, 40 – 45 ஆயிரம் டன்களாகும்.
ஆனால், இவ்வாண்டு பருவ மழை ஏமாற்றத்தை அளித்திருப்பதால், உற்பத்தி மிகவும் குறைந்து, 20 – 22 ஆயிரம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை இதன் அறுவடை காலமாகும். இது, நான்கு கட்டங்களாக நடைபெறும். வாரத்தில் மூன்று நாட்கள் தமிழகம் போடி நாயக்கனுார் மற்றும் கேரள மாநிலம் புட்டடி ஆகிய இடங்களிலிருந்து கணினி மூலமாக ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஏலத்தை மத்திய அரசு நிறுவனமான, ‘Spices board of india’ நடத்துகிறது.
தேவை குறைவு மற்றும் கடந்த வருட உற்பத்தியினால் ஏலக்காய் சந்தையில் வரவு அதிகம் இருப்பதாலும், இதன் விலை கடந்த தினங்களாக சரிவை சந்தித்தது. வரும் நாட்களில் மந்தமான சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (ஏப்ரல் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) 1,335 1,300 1,415 1,455
செம்பு
செம்பு உற்பத்தியில் தென் அமெரிக்க நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த மாதத்தில் சிலி மற்றும் பெரு நாட்டில் செம்பு உற்பத்தி சுரங்கத்தில் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தால், அதன் உற்பத்தி பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.
குறிப்பாக எஸ்கோடிடா எனும் சுரங்கம் செம்பு உற்பத்தியில் முதன்மையானது. அதன் உற்பத்தியில் 5 லட்சம் டன் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.தென் அமெரிக்க நாடுகளை தொடர்ந்து இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளிலும் செம்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தோனேஷிய நாட்டில் அரசாங்கத்துக்கும் சுரங்க உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கொள்கை மோதல், ஏற்றுமதி குறித்த கொள்கை முடிவு காரணமாக ஏற்பட்ட சர்ச்சை இவற்றால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இந்நாட்டை சேர்ந்த பிரீபோர்ட் சுரங்கம் உலக செம்பு உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உயர்ந்து வரும், எல்.எம்.இ., ஸ்டாக் லெவல் இதன் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் உள்ளது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (ஏப்ரல் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 374 369 386 392
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|