பதிவு செய்த நாள்
30 மார்2017
00:37
புதுடில்லி : ‘மின்னணு வர்த்தகம் எனப்படும், வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரித்து வந்தாலும், கடைகளில் தான், பெரும்பான்மையான விற்பனை நடைபெறுகிறது’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஜெப்ரா டெக்னாலஜி நிறுவனம், கடைகள் மற்றும் வலைதளங்களில், பொருட்களின் சில்லரை விற்பனை குறித்து, ஆய்வு மேற்கொண்டது.
உலகளவில், பிரத்யேக பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு அங்காடிகள், வர்த்தக வளாகங்கள், ஆடையகங்கள், பல்பொருள் கடைகள், மின்னணு சாதன விற்பனை மையங்கள், மருந்தகங்கள், வீட்டு பொருட்களை விற்பனை செய்யும் மையங்கள் உட்பட, சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ள, 1,700க்கும் அதிகமானோரிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இது குறித்து, ஜெப்ரா டெக்னாலஜி நிறுவனத்தின், இந்தியாவிற்கான, பிராந்திய விற்பனை பிரிவு இயக்குனர் தீப் அகர்வால் கூறியதாவது: உலகளவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த, சில்லரை விற்பனையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா உள்ளிட்ட, ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் பங்களிப்பு, 28 சதவீத அளவிற்கு இருந்தது. மின்னணு வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிற போதிலும், கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில், மக்களுக்கு உள்ள ஆர்வம் சிறிதும் குறையவில்லை.
ஒட்டுமொத்த சில்லரை விற்பனையில், கடைகள் வாயிலாக, 91 சதவீத அளவிற்கு விற்பனை நடைபெற்று வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே சமயம், சில்லரை விற்பனையாளர்கள், தங்கள் கடைகளுடன், வலைதளம் வாயிலாகவும் பொருட்களை விற்பனை செய்து, வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள், வலைதளம் வாயிலாகவே, கடைகளை பார்வையிடவும், பொருட்களை தேர்வு செய்யவும் தேவையான தொழில்நுட்ப வசதிகளை அளிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர். வர்த்தகம் பெருக, வலைதளம் மற்றும் கடைகள் வாயிலான சேவைகளை ஒருங்கிணைப்பது முக்கியம் என, 76 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
சரக்கு போக்குவரத்து, கிடங்கு இருப்பு, பொருட்கள் சப்ளை உள்ளிட்டவற்றை, உடனுக்குடன் அறிந்து கொள்ள, ‘சென்சார்’ உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த உள்ளதாக, 73 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த, சில்லரை விற்பனையாளர்களில், 76 சதவீதம் பேர், 2021க்குள், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வாடிக்கையாளர் வருகை, பொருட்கள் தேர்வு போன்றவற்றை கணித்து, வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள உள்ளதாக கூறியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|