பதிவு செய்த நாள்
02 ஏப்2017
04:35
மும்பை:இதுவரை இல்லாத வகையில், கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், தர நிர்ணய நிறுவனங்கள், 3,500 நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பை குறைத்துள்ளன.இதே காலத்தில், 2013 – 14ம் நிதியாண்டிற்கு பின், மிகக் குறைந்த அளவாக, 1,800 நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளதாக, ‘புளும்பெர்க்’ நிறுவனத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.ஏராளமான நிறுவனங்கள், வங்கிகளுக்கு கடனை திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கின்றன. பல நிறுவனங்கள், கூடுதல் கடன் சுமையுடன், அதிக வட்டி செலவினத்தில் தள்ளாடுகின்றன.
மறுபுறம், பல நிறுவனங்களிடம் இருந்து, நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க முடியாமல், வங்கிகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ஒட்டுமொத்த வங்கிகளின் வாராக்கடன் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கடன் அளவு, 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இழப்பை கண்டு வரும், 12 நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றின் கடன் நிலுவையில் ஒரு பகுதியை, பங்கு முதலீடாக மாற்ற வங்கிகள் முயன்றன.இதன் மூலம், நிறுவனங்கள் புத்துயிர் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
வங்கிகள், நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில், அவற்றின் கடன் தவணை காலத்தை நீட்டித்தும், குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கும் அளிக்கின்றன.நிறுவனங்களிடம் நிதிப் புழக்கம் பெருகி, அவை வர்த்தகத்தில் வளர்ச்சி காணும் என்ற நோக்கில், இத்தகைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எனினும், துவண்டுவிட்ட பல நிறுவனங்களை, துாக்கி நிறுத்த முடியவில்லை.
அதனால், பல நிறுவனங்கள் புதிய கடன்களை பெறுவதற்கான தகுதியை இழக்க நேர்ந்துள்ளது. பல நிறுவனங்களின், கடன் தகுதி மதிப்பீட்டை, ஸ்திரமான நிலையில் இருந்து, பாதிக்க வாய்ப்புள்ள பிரிவிற்கு, தர நிர்ணய நிறுவனங்கள் குறைத்துள்ளன.இந்தாண்டு ஜனவரியில், லோதா டெவலப்பர்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்டீல் நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீட்டை, தர நிர்ணய நிறுவனங்கள் குறைத்துள்ளன.
மூடிஸ் நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் தகுதி மதிப்பீட்டை, அதிக அபாயம் உள்ள முதலீட்டு பிரிவில் இருந்து, பாதிக்க வாய்ப்புள்ள பிரிவிற்கு மாற்றியுள்ளது.கடந்த பிப்ரவரியில், ஐ.எப்.சி.ஐ., – ஐ.டி.பி.ஐ., வங்கி ஆகியவற்றின் கடன் தகுதி மதிப்பீடு குறைக்கப்பட்டு உள்ளது. டாடா டெலிசர்வீசஸ், ஜனலக் ஷ்மி ஆகிய நிறுவனங்களின் கடன் தகுதியை, தர நிர்ணய நிறுவனங்கள், கடந்த மார்ச்சில் குறைத்துள்ளன.அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் சூடுபிடிக்கும் பட்சத்தில், பல்வேறு தொழில்கள் மந்த நிலையில் இருந்து மீண்டு, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றம் – இறக்கம்கடந்த நிதியாண்டில், கடன் தகுதி உயர்த்தப்பட்ட நிறுவனங்களுக்கும், கடன் தகுதி குறைக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையிலான விகிதாச்சாரம், 1:94 ஆக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 1:52 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|