பதிவு செய்த நாள்
03 ஏப்2017
00:55
மும்பை: கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், பங்கு முதலீட்டில், கையை சுட்டுக் கொண்ட பலருக்கு, வெள்ளியுடன் முடிவடைந்த, 2016 – 17ம் நிதியாண்டு, மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வருவாயை வழங்கியிருக்கும்.
தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, கடந்த நிதியாண்டில், 18.94 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 16.98 சதவீதம் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வருவாயை வழங்கி, மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.முந்தைய நிதியாண்டில், பங்குச் சந்தை யின் வளர்ச்சி, 5 – 6 சதவீதம் பின்னடைவைக் கண்டு, முதலீடுகள் மீதான வருவாய் சரிவடைய வழிவகுத்தது. ஏழு ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, கடந்த நிதியாண்டில், பங்குச் சந்தை குறியீடுகள் அதிகபட்ச வளர்ச்சியை கண்டன.
இதற்கு முன், பிரதமர் மோடி தலைமையில், மத்திய அரசு அமைந்த, 2014 – 15ம் நிதியாண்டில், இக்குறியீடுகள், 25 – 27 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தன. கடந்த நிதியாண்டில், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும், அவற்றின் பங்கு சார்ந்த பல்வேறு முதலீட்டு திட்டங்களின் கீழ், குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்கு முதலீடு மேற்கொண்டன. எனினும், நிதியாண்டின் துவக்கத்தில், பங்குச் சந்தைகள், அதிக ஏற்ற, இறக்கத்துடன் தான் காணப்பட்டன. இதற்கு, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறும் சூழல், அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகியவை, முக்கிய காரணங்கள் என, கூறலாம்.
அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், சந்தை எதிர்பார்ப்பை விட, நிறுவனங்களின் நிதி நிலை சிறப்பாக இருந்ததால், பங்குச் சந்தை சூடு பிடித்தது; முதலீடுகள் அதிகரித்தன. எனினும், அக்., – நடப்பாண்டு ஜன., வரை, அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள், அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தன. இந்த நிலை, பிப்., – மார்ச் மாதங்களில் மாறியது; அவை, பங்குகளில், முறையே, 9,902 கோடி ரூபாய் மற்றும் 30,884 கோடி ரூபாய் முதலீடு செய்தன. கடந்த மாதம் வெளியான, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், குறிப்பாக, உ.பி.,யில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு கிடுகிடுவென உயர்ந்தது.
மார்ச் 14 முதல், 30 வரை, அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில், 20,911.15 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், சென்செக்ஸ், 11.34 சதவீதம்; நிப்டி, 12.06 சதவீதம் உயர்ந்து, முதலீடுகள் மீதான வருவாய் அதிகரிக்க துணை புரிந்துள்ளன. நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டிலும், பங்குச் சந்தை முதலீடுகளுக்கு மிகச்சிறந்த வருவாய் கிடைக்கும் என, சந்தையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|