பதிவு செய்த நாள்
16 ஏப்2017
01:59
புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு போராட்டங்களை வென்று, ஒரு வழியாக, 2009ல் தயாரித்து வெளியிட்ட, மலிவு விலை, ‘நானோ’ காரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.கடந்த, 2016- – 17ம் நிதியாண்டில், நானோ கார் விற்பனை, 64 சதவீதம் சரிவடைந்து, 7,589 ஆக குறைந்துள்ளது. மார்ச் மாதம், வெறும், 174 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.கடந்த எட்டு ஆண்டுகளாக, நானோ கார் விற்பனையை அதிகரிக்க, டாடா மோட்டார்ஸ் பல்வேறு சலுகைகளையும், கவர்ச்சி கரமான பரிசு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.இருந்த போதிலும், நானோ கார் விற்பனை உயராமல், ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.சாதாரண மக்களும், காரில் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், டாடா குழுமத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா, ஒரு லட்சம் ரூபாய் விலையில், நானோ காரை அறிமுகப்படுத்தினார். அதன்பின், மாடல்களுக்கு ஏற்ப, கார் விலை உயர்த்தப்பட்டது.எனினும், விற்பனை விலையை விட, கார் தயாரிப்பு செலவு அதிகமாக உள்ளதால், 6,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2016 அக்டோபரில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த, சைரஸ் மிஸ்திரி, இயக்குனர் குழுவுக்கு கடிதம் எழுதினார். நானோ கார் தயாரிப்பை நிறுத்தவும், அவர் யோசனை தெரிவித்தார்.ஆனால், தன் கனவு திட்டமான நானோ கார் தயாரிப்பை நிறுத்த, ரத்தன் டாடா விரும்பவில்லை என, கூறப்படுகிறது.தற்போது, நானோ கார் விற்பனை மட்டுமின்றி, அதன் உதிரி பாகங்களுக்கான தேவையும் குறைந்து விட்டதாக, முகவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், நானோ கார் தயாரிப்பு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது குறித்து, டாடா மோட்டார்ஸ் எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|