பதிவு செய்த நாள்
19 ஏப்2017
01:55
கிரேட்டர் நொய்டா : ‘‘அடுத்த தலைமுறைக்கான, புதிய தொழில் புரட்சியின் பயன்களை பெற, இந்திய சேவைகள் துறை, தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
அவர், உ.பி.,யின், கிரேட்டர் நொய்டாவில், சர்வதேச சேவைகள் கண்காட்சியில் பங்கேற்று, மேலும் பேசியதாவது: அடுத்த தலைமுறைக்கான, நான்காம் கட்ட தொழில் புரட்சி குறித்து, உலகளவில் பேசப்படுகிறது. மனிதனுக்கு நிகராக, செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் இயந்திரங்கள், ‘ரோபோ’ எனப்படும், இயந்திர மனிதன் பயன்பாடு, அலுவலகங்களில் தன்னிச்சையான பணி நடைமுறைகள், அனைத்து பயன்பாட்டிலும், ‘டிஜிட்டல்’ எனப்படும், மின்னணு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் ஆகியவையே, புதிய தொழில் புரட்சி எனப்படுகிறது.
இதில், சேவைகள் துறையில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு, எண்ணற்ற வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. பொருட்கள் தயாரிப்பிலும், ஏராளமான சேவைகளின் பங்களிப்பு இருக்கும்.நான்காம் கட்ட தொழில் புரட்சி, இந்திய சேவை துறை நிறுவனங்களுக்கு அளப்பரிய வர்த்தக வழிகளை அடையாளம் காட்டும். இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு, சேவைகள் துறை தயாராக வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள சேவைகள் துறையை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, 2014 – 15ம் நிதியாண்டில், சர்வதேச சேவைகள் துறை சரிவை கண்ட நிலையிலும், இந்திய சேவைகள் துறை, இரண்டரை மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. உலகளவில், சேவைகள் வர்த்தகத்தில், இந்தியா, 3.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதை மேலும் உயர்த்த, அரசின் கொள்கைகள் துணை புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|