பதிவு செய்த நாள்
20 ஏப்2017
00:12
மும்பை : பிற நாடுகளை விட, இந்தியாவைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள், அடுத்த ஓராண்டில், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என, திடமான நம்பிக்கையுடன் உள்ளது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
பி.டபிள்யு.சி., நிறுவனம், 79 நாடுகளைச் சேர்ந்த, 1,379 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், இந்தியாவைச் சேர்ந்த, 106 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்று, கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக, பி.டபிள்யு.சி., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து, உறுதியாக கணிக்க முடியாத சூழலும், புதிய தொழில்நுட்ப மாற்றங்களும், இந்திய நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளன. இந்த நிலையிலும், ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில், 71 சதவீதம் பேர், அடுத்த ஓராண்டில், தங்கள் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி அதிகரிக்கும் என, மிகுந்த நம்பிக்கைஉடன் தெரிவித்து உள்ளனர்.
இந்த நம்பிக்கை, உலகளவில், 38 சதவீதமாகவும், சீனா மற்றும் பிரேசிலில், முறையே, 35 மற்றும் 57 சதவீதமாகவும் உள்ளது. பெருகி வரும் நகர்ப்புறங்களும், அதிகரித்து வரும் மக்களின் செலவழிப்பு வருவாயும், இந்திய நிறுவனங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளன. மேலும், பொருட்களுக்கான தேவைப்பாடு உயர்ந்து வருவதும், அரசின் சீர்திருத்தங்கள் தொடரும் என்ற எதிர்பார்ப்பும், அதிகரித்து வரும் அன்னிய நேரடி முதலீடுகளும், தங்கள் வளர்ச்சிக்கு உதவும் என, இந்திய நிறுவனங்கள் நம்புகின்றன.
அதே சமயம், திறமையான வல்லுனர்களுக்கு உள்ள பற்றாக்குறை, உடனுக்குடன் மாறும் தொழில்நுட்பங்கள், போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, அளவிற்கு அதிகமான கட்டுப்பாடுகள் ஆகியவை, சவாலாக உள்ளதாக, தலைமை செயல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.பணியாளர்கள், ‘ரோபோ’ எனப்படும், இயந்திரங்களுடன் இணைந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆராய்வதாக, 56 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்; அவர்களில், 67 சதவீதத்தினர், அடுத்த ஓராண்டில், கூடுதல் பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
புதிய மாற்றம்இந்திய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறித்து, தலைமை செயல் அதிகாரிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஏற்ற, இறக்கமுள்ள வர்த்தகச் சூழலில், அவர்களின் நம்பிக்கை, இந்தியா, புதிய மாற்றத்திற்கு தயாராகி வருவதற்கான அறிகுறியாக தென்படுகிறது. நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளித்தாலும், அவற்றுக்கு, தனித்துவமிக்க வல்லுனர்களுக்கான தேவை, தொடர்ந்து இருந்து வருகிறது. இயந்திரமயமாகி வரும் இன்றைய தொழில் உலகில், அத்தகைய வல்லுனர்களுக்கான தேவை, மேலும் அதிகரிக்கும்.
-சியாம்லால் முகர்ஜி, தலைவர், பி.டபிள்யு.சி., இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|