பதிவு செய்த நாள்
02 மே2017
08:08
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் துறையில், தேசிய அளவில் பிரசித்தி பெற்ற, ‘அமுல்’ நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள், தமிழகத்தில் பால் விற்பனையை துவங்க உள்ளதாக, குஜராத் மில்க் மார்க்கெட்டிங் பெடரேஷனின் (ஜி.சி.எம்.எம்.எப்.,) நிர்வாக இயக்குனர், ஆர்.எஸ்.சோதி, நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். ஜி.சி.எம்.எம்.எப்., என்ற பால் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு நிறுவனம், அமுல் எனும் முத்திரையில், பால் பொருட்களை விற்பனை செய்கிறது.கடந்த, ௨௦௧௬ – ௧௭ம் நிதியாண்டில், ௨௭ ஆயிரம் கோடி ரூபாய் விற்பனையை எட்டிய அமுல், ௨௦௨௦க்குள், ௫௦ ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை இலக்கை அடைய முயற்சித்து வருகிறது. அதன் பொருட்டு, குஜராத் தவிர பிற மாநிலங்களில், வேகமாக வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது.இது பற்றியும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துடனான மோதல்கள் பற்றியும், நமது நாளிதழுக்கு, ஜி.சி.எம்.எம்.எப்., நிர்வாக இயக்குனர், ஆர்.எஸ்.சோதி அளித்த பேட்டி:ஐதராபாத்தில் வெற்றிகரமாக பாக்கெட் பால் விற்பனையை துவங்கிவிட்டீர்கள், அடுத்து எங்கே?பல மாநிலங்களில், சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் பட்டியலில், தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டுக்குள், அங்கு பாக்கெட் பால் விற்பனையை துவங்க திட்டமிட்டு உள்ளோம்.ஏன் தமிழகம்?தமிழகத்தில், பால் நுகர்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிராண்டட் பாக்கெட் பாலுக்கு, தமிழகத்தில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. பிற மாநிலங்களில், பிராண்டட் பாக்கெட் பால் நிறுவனங்கள், நேரடியாக விற்பனை செய்யும் பால்காரர்களுடன் போட்டி போட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அப்படி இல்லை; பால் சந்தையில் கிட்டத்தட்ட, ௧௦௦ சதவீதம் பிராண்டட் பாக்கெட் பால் தான். அதனால், எங்கள் பாக்கெட் பாலை சந்தைப்படுத்துவது சுலபமாக இருக்கும்.அமுல், நுாற்றுக்கணக்கான பால் சார்ந்த உணவுப் பொருட்களை தயாரிக்கிறது; அவை அனைத்தும் மதிப்புக் கூட்டப்பட்டவை; லாபமும் அதிகம். அவற்றில் ஒருசில மட்டும் தான், தமிழக சந்தையில் பரவலாக கிடைக்கின்றன. குறைந்த லாபம் உள்ள பாக்கெட் பால் விற்பனையை விட, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையை, தமிழகத்தில் அதிகப்படுத்துவது தானே உங்களுக்கு லாபம்?பாக்கெட் பாலில், குறைந்த லாபம் தான் உள்ளது என்பது உண்மை தான். ஆனால், பாக்கெட் பால் தான், தினமும் நுகர்வோர் வீடுகளுக்குள் செல்லக் கூடியது. அதன் மூலம், தினமும் நுகர்வோரை சந்தித்தால் தான், அமுல் மீதான நம்பிக்கையும், அமுலுடனான உறவும் வலுப்படும். அந்த நம்பிக்கையும், உறவும் தான், பிற அமுல் உணவுகள் விற்பனைக்கு அடித்தளம். அதனால் தான், பாக்கெட் பால் விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.தமிழகத்தில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க போகிறீர்களா?இல்லை. துவக்கத்தில், ஏற்கனவே அங்குள்ள பால் ஆலையை தான் பயன்படுத்தப் போகிறோம்.அப்போது வெறுமே, அமுல் பெயரில் வேறு யாராவது தயாரித்து தரப் போகின்றனரா?அப்படி இல்லை. குறிப்பிட்ட பால் ஆலையில், அமுல் கண்காணிப்பில், அமுல் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் தொழில் கொள்கைகளின் படி, அமுலுக்காக மட்டும் தான் பால் பதப்படுத்தப்படும். அது, அமுல் ஆலையை போல தான் செயல்படும்; ஐதராபாத்திலும், அப்படித்தான் செயல்படுகிறோம்.தமிழகத்தில், நாட்டு பசு இனங்களின் பாலுக்கு ஒரு சந்தை உருவாகி வருகிறது. அதில், அமுல் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதா?அப்படி ஒரு சந்தை இருக்குமானால், அது வெகுஜன தேவைகளை பிரதிபலிக்கும் சந்தை என, இப்போது கருத முடியாது. முதலில், வெகுஜன சந்தையின் தேவையை பூர்த்தி செய்வது தான், எங்கள் அணுகுமுறையாக இருக்கும். குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அமுல் ஏகப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கிறது. உதாரணமாக, பால் அலர்ஜி உள்ளவர்களுக்காக, ‘லாக்டோஸ் ப்ரீ’ பால் தயாரிக்கிறோம்.அதை போல், நாட்டு பசுவின் பாலுக்கான தேவையை அறிந்து கொண்டு, அந்த வகை சந்தையிலும் நுழைய, எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. மேலும், குஜராத்தில், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் மேம்பாடு பணிகளை, அறிவியல் அடிப்படையில் நெடுங்காலமாக மேற்கொண்டு வருகிறோம். அதில், இந்த பகுதியில் உள்ள நாட்டு பசுவினங்களான, கிர், கான்க்ரெஜ், சாகிவால் ஆகிய இனங்களின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கும், ஜி.சி.எம்.எம்.எப்.,க்கும் தொடர்ந்து முட்டல், மோதலாக இருக்கிறதே... தற்போது கூட, மும்பை ஐகோர்ட்டில், அமுல் மீது, அந்த நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது. என்ன தான் பிரச்னை?இது, இன்று நேற்று பிரச்னை அல்ல. ௨௦௧௨ல் இருந்தே, அந்த நிறுவனம், எங்கள் மீது தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகிறது. ஒவ்வொரு முறையும், நாங்கள் வெற்றி கண்டுஉள்ளோம்.பிரம்மாண்ட பன்னாட்டு நிறுவனங்களிடம், வழக்குகளை கையாள்வதற்கு பிரத்யேக துறையும், அதற்கான நிதி ஒதுக்கீடும் உள்ளன. பெரும் சம்பளத்தில், பெரிய பதவி கொடுத்து, அங்கு ஒரு சிலரை பணியமர்த்தி உள்ளனர். அந்த சம்பளத்தையும், பதவியையும் அவர்கள் நியாயப்படுத்திக் காட்ட வேண்டாமா?ஐஸ் கிரிம் தான் இந்த முறை பிரச்னை. சட்டப்படி, ஐஸ் கிரிம் என்றால், அதில் பெரும்பகுதி பால் சார்ந்த பொருட்கள் இருக்க வேண்டும். அமுல் இப்படிப்பட்ட ஐஸ் கிரிம் மட்டும் தான் தயாரிக்கிறது.தோற்றத்தில், ஐஸ் கிரிம் போல இருக்கும் உறையவைக்கப்பட்ட இனிப்பு பண்டங்கள், தற்போது சந்தையில் அதிகமாகிவிட்டன. அவை பெரும்பகுதி, தாவர எண்ணெயால் தயாரிக்கப்பட்டவை. சட்டம் அவற்றை, ‘ப்ரோசன் டெஸர்ட்’ என, குறிப்பிடுகிறது. கடையில் அவற்றை வாங்கினால், பாக்கெட்டில் எங்கேனும் ஒரு இடத்தில், அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருக்கும்.இது, பெரும்பாலான நுகர்வோர் அறியாத ஒன்று. அதனால், நுகர்வோர் விழிப்புணர்விற்காக ஒரு விளம்பரத்தை வெளியிட்டோம். அதில், எந்த ஒரு நிறுவனத்தையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், ‘க்வாலிட்டி வால்ஸ்’ என்ற பெயரில் உறையவைக்கப்பட்ட இனிப்பு பண்டங்களை தயாரிக்கும், ஹிந்துஸ்தான் யூனிலீவர், தானாக முன்வந்து, அந்த விளம்பரம் அவர்களை குறிவைத்து வெளியிடப்பட்டது போல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தற்போது, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், அதை பற்றி அனுமானமாக எதையும் பேச இயலாது. நாங்கள் நம்பிக்கையுடன் தான் இருக்கிறோம். எங்கள் நுகர்வோர் விழிப்புணர்வு விளம்பரமும், நல்ல வரவேற்போடு ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
– நமது சிறப்பு நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|