பதிவு செய்த நாள்
05 மே2017
02:01
மும்பை : ‘நடப்பாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவைப்பாடு, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 123.50 டன்னாக உயர்ந்துள்ளது. இது, தங்கம் மற்றும் ஆபரண துறை, மந்த நிலையில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதை குறிக்கிறது’ என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.இக்கவுன்சிலின், இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர், பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:கடந்த, 2013 முதல், தங்கம் மற்றும் ஆபரணங்கள் துறை, பல்வேறு கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், 2016ல், தங்க விற்பனை மீது, கூடுதலாக கலால் வரி விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, நகைக் கடைக்காரர்கள், நாடு தழுவிய அளவில், கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பணப்புழக்கம்இதன் தாக்கத்தால், ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவைப்பாடு, 107.30 டன்னாக சரிவடைந்தது. இந்தாண்டு இதே காலத்தில், தங்கத்திற்கான தேவை, 123.50 டன்னாக அதிகரித்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில் தங்கத்தின் தேவை, மதிப்பின் அடிப்படையில், 27,540 கோடி ரூபாயில் இருந்து, 32,420 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பணப்புழக்கம் குறைந்ததை அடுத்து, தங்கத்திற்கான தேவையும் குறைந்தது. தற்போது, பணப்புழக்கம் அதிகரித்துள்ளதும், திருமண காலம் என்பதாலும், தங்கத்திற்கான தேவை அதிகரித்துஉள்ளது.நடப்பாண்டு முதல் காலாண்டில், தங்க ஆபரணங்களுக்கான தேவை, 16 சதவீதம் அதிகரித்து, 92.30 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 79.80 டன்னாக இருந்தது.இதே காலத்தில், தங்க ஆபரணங்கள் தேவைப்பாடு, மதிப்பின் அடிப்படையில், 18 சதவீதம் உயர்ந்து, 20,484 கோடி ரூபாயில் இருந்து, 24,220 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தங்கத்திற்கான மொத்த முதலீட்டு தேவை, 14 சதவீதம் உயர்ந்து, 27.50 டன்னில் இருந்து, 31.20 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, மதிப்பு அடிப்படையில், 16 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,050 கோடி ரூபாயில் இருந்து, 8,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், மறுசுழற்சிக்கான தங்கத்தின் தேவை, 3 சதவீதம் அதிகரித்து, 14 டன்னில் இருந்து, 14.5 டன்னாக உயர்ந்துள்ளது.இறக்குமதிதங்கம் இறக்குமதி, 112 சதவீதம் உயர்ந்து, 127.40 டன்னில் இருந்து, 270.10 டன்னாக அதிகரித்துள்ளது. தங்கத்திற்கான தேவையில், திருமணங்களுக்கான தங்க ஆபரணங்கள், தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு, 40 – 50 சதவீதமாக உள்ளது.ரூபாய் மதிப்பு உயர்வும், பருவமழை குறித்த சாதகமான கணிப்பும், இரண்டாவது அரையாண்டில், தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கச் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ரொக்கக் கட்டுப்பாடு, ‘பான்’ கார்டு விதிமுறை, புதிய ஜி.எஸ்.டி., வரி போன்ற சவால்களும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|