பதிவு செய்த நாள்
07 மே2017
04:08
புதுடில்லி : அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக, ஏ.சி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.இரு நிறுவனங்கள் இணைப்பு குறித்து ஆராய, இருதரப்பு இயக்குனர்கள் அடங்கிய, சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழு மற்றும் தணிக்கை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இணைப்பு குறித்து முடிவு செய்யப்படும். சர்வதேச சிமென்ட் உற்பத்தியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, லபார்கே ஹோல்சிம் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஹோல்டரின்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தில், 63.62 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. அது போல, ஏ.சி.சி., நிறுவனத்திலும், 4.48 சதவீத பங்கை கொண்டுள்ளது.இது தவிர, அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம், ஏ.சி.சி., நிறுவனத்தில், 55.05 சதவீத பங்கை வைத்துள்ளது.ஆக, அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி., நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகள், ஹோல்டரின்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலமாக, லபார்கே ஹோல்சிம் வசம் உள்ளன.அதனால், இரு நிறுவனங்களின் இணைப்பு முயற்சி சுலபமாக நிறைவேறும் என்றாலும், செபி, சந்தை போட்டி கட்டுப்பாடு ஆணையம் உள்ளிட்ட, அரசு அமைப்புகள் அனுமதித்தால் மட்டுமே, இணைப்பு சாத்தியமாகும்.இந்த இரு நிறுவனங்களும் இணையும்பட்சத்தில், ஒருங்கிணைந்த நிறுவனம், ஆண்டுக்கு, 20,425 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்றுமுதலுடன், சிமென்ட் உற்பத்தியில், முதலிடத்திற்கு சற்று நெருக்கமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி திறன்தற்போது, ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த, அல்ட்ராடெக் நிறுவனம், ஆண்டுக்கு, 9 கோடி டன் சிமென்ட் உற்பத்தித் திறனுடன், முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள, அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி., நிறுவனங்களின் சிமென்ட் உற்பத்தித் திறன், 5.71 கோடி டன் ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|