பதிவு செய்த நாள்
12 மே2017
06:25
புதுடில்லி : ‘இந்தியாவில், ‘ஆன்லைன்’ விளையாட்டுகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை, 2021ல், 31 கோடியாக அதிகரிக்கும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
கூகுள் – கே.பி.எம்.ஜி., நிறுவனங்கள், பெங்களூரு, புனே, ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ‘ஆன்லைன்’ விளையாட்டு ஆர்வலர்கள், 3,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு உள்ளன.
அதன் விபரம்: இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிகமானோர் ஈடுபட துவங்கியுள்ளனர். வலைதள விளையாட்டுகளை தேடுவது, 117 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில், 2016ல், 12 கோடியாக இருந்த, ஆன்லைன் விளையாட்டினரின் எண்ணிக்கை, 2021ல், 31 கோடியாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில், 75 சதவீதம் பேர், 20 ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஸ்மார்ட் போன் வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்களில், இளைஞர்கள், ஸ்மார்ட் போனில் அதிகபட்சம், ஆறு வகை விளையாட்டுகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.
சாதாரணமாக விளையாடுவோர், புதிர் விளையாட்டுகளில் அதிக ஆர்வமாக உள்ளனர். சற்று அனுபவம் வாய்ந்தவர்கள், இலக்கு சார்ந்த கடின விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இந்தியாவில், 36 கோடி டாலர் என்ற அளவில் உள்ள, ஆன்லைன் விளையாட்டு சந்தை, 2021ல், 100 கோடி டாலராக வளர்ச்சி காணும். அதிலும், ஸ்மார்ட் போனில், பணம் செலுத்தி பதிவிறக்கும் விளையாட்டு, ‘ஆப்’களை விட, இலவச விளையாட்டு, ‘ஆப்’கள் பிரிவு, 22 மடங்கு வளரும். இவ்வகை, ‘ஆப்’கள் இலவசமாக கிடைத்தாலும், விளையாட்டிற்கு தேவையான முக்கிய ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றை பெற வேண்டுமென்றால், பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|