பதிவு செய்த நாள்
12 மே2017
06:26
மும்பை : பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், கறுப்புப் பணப்புழக்கம் குறைந்ததோ இல்லையோ, மக்கள், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனைக்கு மாறுவது அதிகரித்து உள்ளது; அத்துடன், நிறுவனங்களின் வர்த்தக நிலைப்பாடும் மெல்ல மாறி வருகிறது. குறிப்பாக, பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மொத்த விற்பனையில் பாதிப்பை சந்தித்த நுகர்பொருள் நிறுவனங்கள், தற்போது, புதிய வர்த்தக நடைமுறையை பின்பற்ற துவங்கிஉள்ளன.
இதன்படி, இமாமி, டாபர், பஜாஜ் கார்ப்பரேஷன் போன்ற நுகர்பொருள் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் இன்றி, அவற்றின் பொருட்களை, நேரடியாக நுகர்வோருக்கு சில்லரையில் விற்பனை செய்வதில் தீவிரமாக இறங்கிஉள்ளன. ஜூலை, 1ல் அறிமுகமாக உள்ள, ஜி.எஸ்.டி., வரியால் ஏதாவது தாக்கம் நேர்ந்தாலும், அதை சமாளிக்க, புதிய நடைமுறை உதவும் என, இந்நிறுவனங்கள் நம்புகின்றன.
இது குறித்து, ஆரோக்கிய பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் இமாமி நிறுவனத்தின், இயக்குனர் மோகன் கோயங்கா கூறியதாவது: பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, எங்கள் தயாரிப்புகள் சிலவற்றின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மொத்த விற்பனை சார்ந்த வர்த்தகத்தை ஓரளவு குறைத்து, நேரடி சில்லரை விற்பனையில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளோம். இதற்காக, ‘ரேஸ், தனுஷ்’ என்ற இரு திட்டங்களின் கீழ், 5,000 மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள, 6,000 கிராமப்புறங்களில், வாகனங்கள் மூலம் எங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்கிறோம்.
இதன் மூலம், நடப்பு நிதியாண்டில், நேரடி வர்த்தகம் மேற்கொள்ளும் சில்லரை விற்பனை கடைகளின் எண்ணிக்கையை, 90 ஆயிரத்தில் இருந்து, 7.30 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதை, அடுத்த நிதியாண்டில், 8.30 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டு உள்ளோம். தற்போது, நிறுவனத்தின் விற்பனையில், மொத்த விற்பனை, 55 சதவீதத்தில் இருந்து, 50 – 52 சதவீதமாக குறைந்துள்ளது. இதை, அடுத்த ஆண்டு, 40 – 42 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிறுவனத்தின் விற்பனையில், சில்லரை விற்பனையின் பங்கை, குறைந்தபட்சம், 20 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். நகர்ப்புறங்களில், நேரடியாகவும், கிராமப்புறங்களில் துணை வினியோகஸ்தர்கள் மூலமும், எங்கள் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்கிறோம். மொத்த விற்பனை முறையை முற்றிலுமாக மாற்றுவது இயலாத காரியம்.-சுனில் துகால்,தலைமை செயல் அதிகாரி, தாபர் இந்தியா
பஜாஜ் ஆல்மண்ட் டிராப்ஸ், நோமார்க்ஸ் உள்ளிட்ட ஆரோக்கிய பராமரிப்பு பொருட்களை, கிராமப்புற சந்தைகளில் நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். நிறுவனத்தின் விற்பனையில், மொத்த விற்பனை, 47 சதவீதமாக உள்ளது. இதை, அடுத்த, 12 – 18 மாதங்களில், 40 சதவீதத்திற்கும் கீழாக குறைக்க, இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.-சுமித் மல்ஹோத்ரா, நிர்வாக இயக்குனர், பஜாஜ் கார்ப்பரேஷன்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|