பதிவு செய்த நாள்
17 மே2017
21:30
புதுடில்லி : ‘பாக்கெட்’ உணவுகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் குறித்து, நுகர்வோர் எளிதாக அறியும் வகையில், பாக்கெட்டின் வெளிப்புறத்தில், விளம்பரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகள், விரைவில் அமலுக்கு வர உள்ளன.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆய்வு ஆணையமான – எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும், பதப்படுத்திய உணவு வகைகள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு ஒன்றை அமைத்திருந்தது.
‘டிவி’ நிகழ்ச்சி
இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, பாக்கெட் உணவுகள் குறித்த புதிய விதிமுறைகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விரைவில் வெளியிட உள்ளது. இது குறித்து, இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் கூறியதாவது: வல்லுனர் குழு, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. குறிப்பாக, அதிக அளவிற்கு பதப்படுத்தப்படும் உணவுகள், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு, கூடுதல் வரி விதிக்க வலியுறுத்தி உள்ளது.
‘ஜங்க் புட்ஸ்’ எனப்படும், நொறுக்குத் தீனிகள் குறித்து, குழந்தைகளுக்கான, ‘டிவி’ சேனல் அல்லது அவர்களுக்கான, ‘டிவி’ நிகழ்ச்சிகளின் நடுவே விளம்பரப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்து உள்ளது. உணவுப் பொருட்கள் அடங்கிய பாக்கெட் மீது, உள்ளே அடைக்கப்பட்டுள்ள உணவின் மொத்த கலோரிகள், கார்போஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்பு, புரதம், சோடியம், நார் சத்து உள்ளிட்ட விபரங்களை, கண்டிப்பாக அச்சிட வேண்டும் என, குழு பரிந்துரைத்து உள்ளது.
புகார்
குறிப்பாக, உணவுப் பொருளில், ‘டிரான்ஸ் – பேட்’ எனப்படும், பதப்படுத்தும் போது, எண்ணெய் திடமாவதால் உருவாகும் கொழுப்பின் அளவை, கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். அதன் அடிப்படையில், விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். வீடு, அலுவலகம், பொது இடம், வழிபாட்டு தலம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், மக்களுக்கு பாதுகாப்பான, ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்கள் குறித்து, நுகர்வோரிடம் விழிப்புணர்வை அதிகரிக்கவும், புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி பெற்ற, குறைந்தபட்சம் ஒரு மேற்பார்வையாளர் முன்னிலையில், உணவு வகைகள் தயாரிப்பதை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பான உணவு தயாரிப்பு குறித்த சான்றிதழ் பயிற்சி திட்டத்தை, விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். வலைதளம் மூலமாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களிலும், இப்பயிற்சியை பெறலாம். நாடு முழுவதும் இத்திட்டத்தை, தனியாருடன் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
-பவன் குமார் அகர்வால், தலைமை செயல் அதிகாரி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|