பதிவு செய்த நாள்
19 மே2017
02:21
மும்பை : ‘வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன்’ எனப்படும், மெய்நிகர் கரன்சிகள், சட்டபூர்வமானவை அல்ல’ என, ரிசர்வ் வங்கி எச்சரித்த போதிலும், இந்தியாவில், அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கிடுகிடுவென பெருகி வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மஹின் குப்தா என்பவர், இரு நண்பர்களுடன் இணைந்து, பிட்காய்ன் வர்த்தகத்திற்கென, 2012ல், ‘பை செல் பிட்காய்ன்’ என்ற நிறுவனத்தை, சிங்கப்பூரில் துவக்கினார். இதையடுத்து, 2015ல், ‘ஸெப்போ’ என்ற பெயரில், இந்தியாவில், பிட்காய்ன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தினார்.தற்போது, ஸெப்போ, இந்தியாவில் முதன்முதலாக துவங்கப்பட்ட, ‘மொபைல் ஆப்’ சார்ந்த, பிட்காய்ன் சந்தையாக திகழ்கிறது. இந்த, ‘ஆப்’பை, தினமும், 2,500க்கும் அதிகமானோர் பதிவிறக்கி, பிட்காய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‘‘இந்தியாவில், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த, ‘ஆப்’பை பயன்படுத்தி, பிட்காய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் செப்டம்பருக்குள், இந்த எண்ணிக்கை, 10 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கிறோம்,’’ என, ஸெப்போ நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி சந்தீப் கோயங்கா தெரிவித்து உள்ளார்.பிட்காய்ன், சட்டபூர்வ கரன்சி அல்ல; பிட்காய்ன் வைத்திருப்போர், முதலீட்டாளர் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுவோர் அனைவரும், அவர்களின் சொந்த பொறுப்பிலேயே செயல்படுவதாக கருதப்படுவர் என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.அதையும் மீறி, இந்தியாவில் ஏராளமானோர், பிட்காய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக, நிதி வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். பிட்காய்ன் தொடர்பான கொள்கை அறிவிப்பை, மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|