பதிவு செய்த நாள்
21 மே2017
06:48
புதுடில்லி: ‘வாகன துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும்’ என, இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘சியாம்’ தெரிவித்து உள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., குழு, 5, 12, 18 மற்றும் 24 சதவீதம் என்றளவில், சரக்கு மற்றும் சேவை வரியை நிர்ணயித்துள்ளது.
இதன்படி, வாகன துறை, 28 சதவீத வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வரிக்கு, 15 சதவீத கூடுதல் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆக, வாகன துறைக்கு, மொத்தம், 43 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது, தற்போதுள்ள, 55 சதவீத அதிகபட்ச வரிக்கும் குறைவாக உள்ளதால், புதிய வரி விதிப்பை, ‘சியாம்’ வரவேற்றுள்ளது.இது குறித்து,
இந்த அமைப்பின் தலைவர் வினோத் தாசரி வெளியிட்டுள்ள அறிக்கை:வாகன துறையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல, வரி விதிப்பு உள்ளது. இதனால், உள்நாட்டில் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும். இது, மத்திய அரசின், ‘வாகன செயல் திட்டம் 2016 – 26’ன் கீழ் நிர்ணயிக்கப் பட்டுள்ள இலக்கை எட்ட உதவும். வாகன துறையின் சில பிரிவுகளில், வரி குறைந்துள்ளது. குறைவான வரி விதிப்பு உள்ள சில பிரிவுகளில், வரி உயர்த்தப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த அளவில், சீரான, அதே சமயம் நீடித்து நிலைக்கக் கூடிய வரி விதிப்பு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மின் வாகனங்களுக்கான வரி, மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, மின் வாகன தயாரிப்பை ஊக்குவிக்கும். அது போல, எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் இயக்கும் கலப்பின கார்களுக்கும், வரியை குறைக்க வேண்டும். ஏனெனில், சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் வாகனங்களுக்கு, மத்திய அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அதன்படி, மாசு குறைவான கலப்பின கார்களுக்கு, தற்போதுள்ள, 30 சதவீத வரி விதிப்பு, ஜி.எஸ்.டி.,யில் நீட்டிக்கப்படும் என,
எதிர்பார்த்தோம். அது போல, ஆடம்பர கார்களுக்கான, 28 சதவீத வரி மற்றும் 15 சதவீத கூடுதல் வரி ஆகியவை, 10 – 13 இருக்கைகள் கொண்ட, பொது போக்கு வரத்து வாகனத்திற்கும் விதிக்கப்பட்டு உள்ளது. இதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த அம்சங்களை, ஜி.எஸ்.டி., குழு மறுபரிசீலனை செய்யும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வேலைக்கு ஆகாது: புதிய, ஜி.எஸ்.டி., வரியால், வாகன துறைக்கு எந்த பயனுமில்லை. சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் கலப்பின வாகனங்களுக்கு, அதிகபட்ச வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது, பசுமை வாகனங்களை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைக்கு நேர்மாறானது.
ராகேஷ் ஸிரிவஸ்தவா
விற்பனை – சந்தைப்படுத்தல், ஹூண்டாய் மோட்டார் இண்டியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|