பதிவு செய்த நாள்
22 மே2017
07:35
பணவீக்கம் மற்றும் ஆண்டுதோறும் அதிகரிக்கும் செலவு உள்ளிட்ட அம்சங்களை, மனதில் கொண்டு, பிள்ளைகளின் எதிர்கால கல்வி செலவுக்கு திட்டமிட வேண்டும்.
உயர்கல்வியின் முக்கியத்துவத்தை எல்லாருமே அறிந்து இருக்கின்றனர். எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் உயர்கல்வி வழங்க வேண்டும் என்றே பெற்றோர் விரும்புகின்றனர். ஆனால், உயர்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருந்தால் மட்டும் போதாது, அதற்கு சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். எப்படி மற்ற இலக்குகளுக்காக திட்டமிட்டு சேமிப்பதும், முதலீடு செய்வதும் முக்கியமானதோ அதே போல உயர்கல்விக்கான செலவுகளை சமாளிக்கவும் திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம் என, நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். உயர்கல்விக்கான திட்டமிடல் என்று வரும் போது, முன்கூட்டியே திட்டமிடத் துவங்குவது, அதன்படி தொடர்ந்து விடாமல் முதலீடு செய்து வருவதும் முக்கியம்.
ஏன் முக்கியம்?பொதுவாக, ஏழு முதல் எட்டு ஆண்டு கால அவகாசத்தில், திட்டமிடலை துவங்கி சேமிப்பது நல்லது என்கின்றனர். முன்கூட்டியே திட்டமிடலை துவக்குவதற்கு, இரண்டு முக்கிய காரணங்களை வல்லுனர்கள் முன்வைக்கின்றனர். ஒன்று பணவீக்கம். மற்றொன்று ஆண்டுதோறும் அதிகரிக்கும் செலவு. பெற்றோர் மேற்படிப்பிற்கான செலவை மனதில் கொள்ளும் போது தற்போதையை நிலையையே அளவுகோலாக கொள்கின்றனர். ஆனால், சில ஆண்டுகள் கழித்து பணவீக்கத்தின் தாக்கம் காரணமாக தேவைப்படும் தொகை அதிகமாக இருக்கும் என்பதை உணர வேண்டும். மேலும், ஆண்டுதோறும் அதிகரிக்கும் செலவு காரணமாக கல்விக் கட்டணமும் அதிகரித்து வரும். எனவே, மேற்படிப்பு காலத்தில், எதிர்பார்த்ததை விட கூடுதலாக தொகை தேவைப்படலாம். இதற்கு ஈடு கொடுக்க வேண்டும் எனில் திட்டமிட்டு சேமிப்பதே சிறந்த வழி!
எவ்வளவு தேவை?உயர்கல்விக்காக திட்டமிடுவதில் உள்ள மிகப்பெரிய பிரச்னை, எவ்வளவு தொகை தேவை என, துல்லியமாக கணிப்பது கடினமான விஷயமாகும். எதிர்காலத்தில் பிள்ளைகள் எந்த துறையில் வேண்டுமானாலும் மேற்படிப்பை தேர்வு செய்ய விரும்பலாம். இதை மனதில் கொண்டு, எந்த விதமான கல்வியை அளிக்க விரும்புகிறோம் என்பதை தீர்மானித்துக்கொண்டு தேவைப்படக்கூடிய அடிப்படை தொகையை நிர்ணயித்துக்கொண்டு அதற்கேற்ப சேமிக்க வேண்டும். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், பிள்ளைகளின் ஆர்வம் செல்லும் திசையை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக தொழில் முறையிலான மேற்படிப்பு எனில், அதற்கேற்ப அடிப்படை தொகை அமையும். அடிப்படை தொகையை தீர்மானித்தப்பின், பணவீக்கம் மற்றும் ஆண்டுதோறும் உயரும் செலவுக்கான தொகையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முன்கூட்டியே திட்டமிடலை துவங்கிய பின்னர் தேவைக்கேற்ப அதை மேம்படுத்திக்கொள்வது சாத்தியம்.
பல பெற்றோர் தாமதமாக திட்டமிடலையும், சேமிப்பையும் துவக்குவது போலவே, தவறான முதலீட்டு சாதனங்களை நாடுவதாகவும் வல்லுனர்கள் கருதுகின்றனர். பொருத்தமில்லாத முதலீடுகள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போவதோடு செலவு மிக்கதாகவும் அமைந்துவிடலாம். எனவே, சரியான முதலீட்டு வழிகளை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும். உயர்கல்வி என்பது மிகவும் முக்கியமான நிதி இலக்கு என்பதால், முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் அவை அதிக பலன் தரக் கூடியவையாகவும் இருக்க வேண்டும்.
முதலீட்டு சாதனங்கள்அப்போது தான், பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் செலவுக்கு ஈடுசெய்ய முடியும். சமபங்கு மற்றும் பேலன்ஸ்டு மியுச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் பணவீக்கத்தை ஈடு செய்யலாம் என்கின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் சந்தையின் ஏற்ற, இறக்கங்களையும் தாக்குப்பிடித்து பலன் பெறலாம். முதலீட்டு சாதனங்களை தேர்வு செய்வதில், இலக்கை அடைய கைவசம் உள்ள காலத்திற்கு ஏற்பவும் அமையும். சில ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் சேமிக்கத் துவங்கும் போது அதிக அளவில் ரிஸ்க் எடுக்க முடியாது. அதற்கேற்ற முதலீடுகளே நாட வேண்டும். மாறாக, 8 ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் இருந்தால், மேலும் சிறப்பாக திட்டமிட முடியும். உயர்கல்வி செலவை இலக்காக கொண்டு திட்டமிடுவதன் மூலம், கல்விக்கடன் வசதியை நாடுவதற்கான தேவையையும் குறைக்க முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|