பதிவு செய்த நாள்
29 மே2017
05:03
முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்தால், சந்தை தொடர்ந்து ஏற்றம் காண்பது இயற்கை.
எஸ்.ஐ.பி., மற்றும் ரொக்க முறையில் தொடர்ந்து உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். உள்நாட்டு முதலீட்டாளர்களின் உற்சாக மிகையே, சந்தை தொடர் உயர்வுக்கு முக்கிய காரணம் என, சொல்லலாம். இந்த போக்கின் தொடர் வினைகளை ஆராய்வோம்...
சந்தையின் மதிப்பு மிகையாக இருந்தாலும், பரஸ்பர நிதி திட்டங்கள் அந்த பணத்திற்கு உடனடியாக பங்குகளை வாங்கிவிட வேண்டும். வந்து சேரும் பணத்தை, வைப்பில் கொண்டோ, காத்திருந்தோ முதலீடு செய்ய, அந்த பங்கு திட்டங்களின் நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை. அந்த திட்டங்களின் வரைமுறைகள் அப்படி வகுக்கப்பட்டுள்ளன. சந்தை உயர் மதிப்பீட்டை அடைந்தால், அந்த நேரத்தில் நிதானமும் கவனமும் கொள்ள வேண்டிய பொறுப்பு யாருடையது என்ற கேள்வி எழும் நேரத்தில், பரஸ்பர நிதி நிர்வாகம் அதற்கு பொறுப்பல்ல என்பது மிகத் தெளிவு. நம் நாட்டு முதலீட்டு திட்டங்களின் மிகப்பெரிய குறையாக இந்த குறிப்பிட்ட வரைமுறை வெளிப்படுகிறது. அந்த திட்டங்களின் வடிவமைப்பு அப்படி இருப்பதே இதற்கு மூல காரணம்.
நாம் பணத்தைக் கொடுத்தால், அவர்கள் சந்தையின் மதிப்புக்கு அப்பாற்பட்டு உடனடியாக முதலீடு செய்வர். ஆகவே, எப்போது முதலீடு செய்யக்கூடாது என்ற முடிவுக்கு பொறுப்பு, முதலீட்டாளரை சார்ந்தது. இதை முதலீட்டாளர்கள் நன்கு புரிந்து கொள்ளும் தருணம் இது. சந்தையில், எந்த பங்குகள் உயர்மதிப்பீட்டை அடைந்து விட்டனவோ, அவற்றை தவிர்க்கும் பொறுப்பு முதலீட்டாளருக்கு மட்டுமே உண்டு. அந்த பொறுப்பை பிறரிடம் கொடுக்க முடியாது என்பதை ஒவ்வொரு முதலீட்டாளரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், சந்தையில் சில பகுதிகள் கவனமற்றும், மலிவாகவும் இருப்பது இயற்கையே. ஒவ்வொரு முறையும் சந்தை, உச்சத்தை தொடும்போதும், சந்தையின் முழுக் கவனமும் குறிப்பிட்ட சில துறை பங்குகளில் மட்டுமே இருக்கும்.
அதேசமயம், வேறு சில துறைகளின் பங்குகள் சந்தையால் ஒதுக்கப்பட்டு மலிவாக விற்பனை ஆகும். அந்த பங்கு களை வாங்க யாரும் அறிவுறுத்தமாட்டார்கள். குறுகிய கால மாற்றங்களில் மட்டுமே சந்தையின் முழு நாட்டமும் இருப்பதே இதற்கு மூல காரணம்.
நீண்ட கால நோக்கோடு முதலீடு செய்யும் வெகு சிலரே இந்த துறை பங்குகளை வாங்குவர். அந்த முதலீட்டாளர் வட்டம் சந்தையில் ஒரு சிறுபான்மையே ஆகும். இந்த சிறுபான்மை வட்டம் மட்டுமே ஒவ்வொரு முறையும் மாற்றுச் சிந்தனையும், எதிர்மறை முடிவாற்றலும் கொண்டு முதலீடு செய்யும்.
சந்தை மேலும் உயர, உயர; ஒவ்வொரு முதலீட்டாளரும் தன் முதலீடுகளை காக்கும் வண்ணம் முடிவெடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். பெரும்பான்மை சிந்தனையில் இருந்து விலகி, அந்த சிறுபான்மை சார்ந்து சிந்திக்கும் தருணம் இது. மாற்றி யோசிக்கும் முதலீட்டாளர்களை அடையாளம் கண்டு, அவர்கள் சிந்தனையை புரிந்து கொள்வது ஒரு புதிய புரிதலுக்கு வழி வகுக்கும்; அதற்கான நேரம் இது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|