பதிவு செய்த நாள்
30 மே2017
05:58
பெங்களூரு : ‘இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், புதிய தொழிற்நுட்பங்களை விரைவாக புகுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறியதால், அவற்றின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் வேலையிழக்க நேரிடும்’ என, ‘ஹெட் ஹன்டர்ஸ்’ ஆய்வு நிறுவனம், சமீபத்தில் தெரிவித்திருந்தது.
தற்போது, இதே நிறுவனம், ‘டி.சி.எஸ்., – இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது; அவை, இந்திய மின்னணு வணிகத்தில் முன்னிலை வகிக்கும்’ என, தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனர் கிரிஸ் லஷ்மிகாந்த், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: அமெரிக்காவின், ஐ.பி.எம்., – அசெஞ்சர் போன்ற, ஐ.டி., நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, அவற்றின் மின்னணு தொழிற்நுட்பத் திறனை மேம்படுத்த, ஏராளமான அளவில் முதலீடு செய்யத் துவங்கிவிட்டன. அதனால், 2015ல், ஐ.டி., நிறுவனங்களுக்கு கிடைத்த, 137 மின்னணு தொழிற்நுட்ப ஒப்பந்தங்களில், ஐ.பி.எம்., – அசெஞ்சர் ஆகிய நிறுவனங்கள், முறையே, 45 மற்றும் 16 ஒப்பந்தங்களை கைப்பற்றின.
அதே சமயம், காக்னிஸன்ட், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு, முறையே, 8 மற்றும் 5 ஒப்பந்தங்களும், டி.சி.எஸ்., மற்றும் விப்ரோவுக்கு, தலா, 4 ஒப்பந்தங்களும் கிடைத்தன.இந்தாண்டும், இதுவரை ஒப்பந்தங்களை பெற்றதில், ஐ.பி.எம்., – அசெஞ்சர் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்நிறுவனங்கள், அவற்றின் புதிய தொழிற்நுட்ப வசதிகள் மூலம், இந்திய நிறுவனங்களை விஞ்சி நிற்கின்றன.
எனினும், டி.சி.எஸ்., நிறுவனத்தின், என்.சந்திரசேகரன், இன்போசிஸ் நிறுவனத்தின் விஷால் சிக்கா, டெக் மகிந்திராவின், சி.பி.குர்னானி ஆகிய மூத்த அதிகாரிகளுக்கு, இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே, மாறப் போகும் புதிய மின்னணு தொழிற்நுட்பங்கள், எதிர்கொள்ள உள்ள சவால்கள் ஆகியவை குறித்த தெளிவான புரிதல் இருந்தது. தற்போது, இந்திய, ஐ.டி., நிறுவனங்களின் கவனம், தொழிலாளர்கள் தேவைப்படும் திட்டங்களில் இருந்து, தன்னிச்சையாக நடைபெறும் திட்டங்கள் பக்கம் திரும்பியுள்ளது.
குறிப்பாக, மேக கணினி, தன்னிச்சையாக பணிகளை மேற்கொள்ளும் சாப்ட்வேர், செயற்கை நுண்ணறிவுடன் பணியாற்றும் சாப்ட்வேர் போன்ற, உயர் தொழிற்நுட்ப மெய்நிகர் வசதிகளை மேம்படுத்திக் கொள்வதில் முனைந்துள்ளன.
இந்திய, ஐ.டி., நிறுவனங்களிடம் அபரிமிதமான பணம் கையிருப்பில் உள்ள போதிலும், அவற்றை, அசெஞ்சர் போல, பிற நிறுவனங்களை கையகப்படுத்த பயன்படுத்திக் கொள்ளாமல் உள்ளன. இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், அமெரிக்காவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள, ஐ.டி., நிறுவனங்களை கையகப்படுத்த வேண்டும். அதன் மூலம், புதிய தொழிற்நுட்ப வசதிகளை அறிந்து, பயன் பெற முடியும். இத்தகைய சூழலிலும், டி.சி.எஸ்., – இன்போசிஸ் உள்ளிட்ட, முன்னணி நிறுவனங்கள், இந்திய மின்னணு வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|