பதிவு செய்த நாள்
03 ஜூன்2017
01:23
மும்பை : சர்வதேச ஆய்வொன்றில், இந்தியாவைச் சேர்ந்த, சிறிய, நடுத்தர நிறுவனங்கள், அடுத்த, 12 மாதங்களுக்கு, அவற்றின் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என, நம்பிக்கை தெரிவித்து, ஆசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளன.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், நடப்பாண்டு வர்த்தக நிலவரம் குறித்து, அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட, 15 நாடுகளைச் சேர்ந்த, சிறிய, நடுத்தர நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தியது.இந்தியாவில், ஆண்டுக்கு, 9 கோடி டாலர் வரை விற்றுமுதலை கொண்ட நிறுவனங்கள், இந்த ஆய்வில் பங்கேற்றன.
ஆய்வறிக்கை விபரம்: இந்திய நிறுவனங்கள், உலகளவிலும், உள்நாட்டிலும் பொருளாதாரம் நன்கு இருக்கும் என, தெரிவித்து உள்ளன. உள்நாட்டில், மத்திய அரசின் கொள்கைகள், ஊக்குவிப்பு திட்டங்கள், ஒழுங்குமுறை நடவடிக்கைகளால், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருவதாக, ஆய்வில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
ஆசிய நாடுகளிலேயே, இந்தியா தான், அடுத்த ஓராண்டில், உள்நாட்டு வர்த்தகம் நன்கு இருக்கும் என, மிகுந்த நம்பிக்கை தெரிவித்து, முதலிடத்தை பிடித்துள்ளது. இக்கருத்தை, ஆய்வில் பங்கேற்ற, 71 சதவீத நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. அடுத்த இடங்களில், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள், முறையே, 62, 54 மற்றும் 36 சதவீதத்துடன் உள்ளன. தொழில் வளர்ச்சி நம்பிக்கையில், சர்வதேச சராசரி அளவான, 45 சதவீதத்தை விட, ஆசியாவின் பங்கு அதிகமாக உள்ளது.
இந்தாண்டு, வருவாய் மற்றும் லாபம் அதிகம் கிடைக்கும்; வருவாய் வளர்ச்சி, குறைந்தபட்சம், 4 சதவீதம் இருக்கும் என, இந்திய நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த, சிறிய,நடுத்தர நிறுவனங்களில், 45 சதவீத நிறுவனங்கள், 2020ல், ஆண்டுக்கு, 8 சதவீத லாப வளர்ச்சி எட்டப்படும் என, கூறியுள்ளன. இதே கருத்தை, சர்வதேச அளவில், 25 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த ஓராண்டில், சொந்த வர்த்தகம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து, இந்திய நிறுவனங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள போதிலும், அதற்கடுத்த ஆண்டில், ஒருசில கொள்கைகள், ஸ்திரமற்ற சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளால் பாதிக்கப்படலாம் என, கவலை தெரிவித்துள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில், உள்நாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க உள்ளதாக, 38 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. விற்பனை வளர்ச்சி மூலம், தற்போதைய சந்தை பங்களிப்பை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக, 35 சதவீத நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சமாளிக்க கூடிய ஆற்றல்:
இந்தியாவைச் சேர்ந்த, சிறிய, நடுத்தர நிறுவனங்களிடம் காணப்படும் நம்பிக்கை, எதிர்வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் ஆகியவை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
– சாரு கவுஷால், துணைத் தலைவர், குளோபல் கார்ப்பரேட் பேமன்ட்ஸ் பிரிவு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|