பதிவு செய்த நாள்
09 ஜூன்2017
07:39
புதுடில்லி: வர்த்தகர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், கையிருப்பு சரக்குகளுக்கு செலுத்தப்பட்ட வரியை, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், விண்ணப்பித்து திரும்பப் பெறுவதற்கான சலுகை காலம் உயர்த்தப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1 முதல், நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது. இதையொட்டி, தற்போதைய வரி நடைமுறையில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறுவதற்கான விதிமுறைகளுடன் வரைவறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தற்போதுள்ள சரக்குகளுக்கு செலுத்திய வரியை, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த, 60 நாட்களுக்குள் விண்ணப்பித்து பெறலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசத்தை உயர்த்தவும், ‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’ எனப்படும், செலுத்திய வரியை திரும்பப் பெறுவதற்கான வரம்பை அதிகரிக்கவும், விற்பனையாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, ‘தற்போதுள்ள சரக்கு களுக்கு செலுத்திய வரியை, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த, 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து பெறலாம்’ என, விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
இத்துடன், தேவைப்பட்டால், கூடுதலாக, 90 நாட்கள் அவகாசம் அளிக்கும் அதிகாரமும், வரி ஆணையர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அல்லது மாநில, ஜி.எஸ்.டி.,யில், 18 சதவீதத்திற்கு மேற்பட்ட வரி உள்ள பொருட்களுக்கு, செலுத்திய வரியை பொறுத்தவரை, நிலுவைத் தொகையில், 60 சதவீதத்தை, வியாபாரிகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் பெறவும், வகை செய்யப்பட்டு உள்ளது.
அதே சமயம், இத்தொகை, 18 சதவீதத்திற்கு உட்பட்ட வரி விகிதத்திற்கு, 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின், ‘பிராண்டு’ பெயர், வரிசை எண் ஆகியவற்றை கொண்ட, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட, ‘டிவி, ரெப்ரிஜரேட்டர், கார் சேஸிஸ்’ உள்ளிட்ட பொருட்களுக்கு செலுத்திய உற்பத்தி வரியை, விற்பனையாளர்கள், 100 சதவீதம் திரும்ப பெறவும் வகை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு, தயாரிப்பு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,க்கு முன், உற்பத்தி வரி செலுத்தியதற்கு சான்றாக, ‘கிரெடிட் டிரான்ஸ்பர் டாக்குமென்ட்’ என்ற ஆவணத்தை, முகவர்களிடம் வழங்க வேண்டும். ஜூலை, 1 முதல், 30 நாட்களுக்கு உள்ளாக, இந்த சான்று ஆவணத்தை, முகவர்கள் அளித்து, செலுத்தப்பட்ட உற்பத்தி வரியை திரும்பப் பெறலாம்.
வரவேற்கத்தக்கது:
பழைய வரி விதிப்பு முறையில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறுவதற்கான விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் வரவேற்கத்தக்கது. இது, மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஒட்டுமொத்த முகவர்கள், வினியோகஸ்தர்களுக்கு நிம்மதியை அளிக்கும். அவர்கள், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செலுத்திய உற்பத்தி வரி முழுவதையும் பெற, இந்த திருத்தம் வகை செய்துள்ளது.
-ரஜத் மோகன், இயக்குனர், நன்கியா அண்டு கோ
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|