பதிவு செய்த நாள்
12 ஜூன்2017
04:14
எண்கள் பேசத் துவங்கும்போது, கண்கள் பூத்துப் போகின்றன. கருத்துகள் தடுமாற ஆரம்பித்து விடுகின்றன. சமீபத்தில் நம் கண்களையும் கருத்துகளையும் தடுமாற வைத்த எண்கள், இந்திய வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம்.
சென்ற 2016 செப்டம்பர் வரைக்குமான வங்கிக் கடன்களின் வளர்ச்சி, 12.1 சதவிகிதம். மார்ச் 2017 இறுதியில் அது, 5.4 சதவீதம். இந்த வீழ்ச்சி யாரை அதிகம் பாதித்தது? பெருநகரங்கள், நகரங்கள், சிறுநகரங்களைவிட கிராமப் புறங்களையே அதிகம் பதம் பார்த்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையே வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம். பிரச்னை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் பரவியுள்ளது.வங்கிக் கடன்களைப் பற்றி ஏன் அக்கறை? இன்றைக்கும் நமது நாட்டின் பெருந்தொழில்கள், சிறு, குறு தொழில்கள் அனைத்துக்கும் கடன் கொடுப்பவை எண்பது சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளே.
வாடிக்கையாளர்கள் பெறும் வீடு, வாகன, தனிப்பட்ட கடன்களைப் பெருமளவு வழங்குவது வங்கிகளே. நெடுஞ்சாலைகள் அமைப்பது, பாலங்கள் எழுப்புவது, மின்சார உற்பத்தி போன்ற இந்தியாவின் பெரும் உள்கட்டுமானத் திட்டங்கள் அனைத்துக்கும் கடன் வழங்க பணிக்கப்படுவதும் பொதுத் துறை வங்கிகளே.இந்தப் பின்னணியில் இருந்து பாருங்கள்... வங்கிகளது கடன் வளர்ச்சிவிகிதம் சரிந்துள்ளது பெருங்கவலை அளிக்கும். எண்கள் இப்போது பேசத் தொடங்கும்.
ஏன் இந்தச் சரிவு?
காரணங்கள் சிக்கலானவை. முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம்.1. கடன்கள் வழங்க, வங்கிகளிடம் போதிய நிதி வசதி இல்லை.2. கடன்கள் வாங்கும் தரப்பில், திருப்பிச் செலுத்த முடியும் என்ற நம்பிக்கைச் சரிவு.3. வங்கிகள் அல்லாத இதர நிறுவனங்களிடம் இருந்து கடன்கள் பெறுவது எளிது.
பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலைமையை வெகுவாக பாதிப்பது, வாராக் கடன்கள். 2016 – 17 நிதியாண்டில் ரூ.7. 65 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் வாராக்கடன், 2017 – 18 நிதியாண்டில், ரூ.8.2 – 8.5 லட்சம் கோடியாக உயரும் என்பது கணிப்பு. அதாவது வங்கிகளின் மொத்த வரவு – செலவில் சுமார் 16 –17 சதவீதம், வாராக்கடன். இதில் பயிர்க்கடன், தொழிற்கடன், வீட்டுக்கடன் என்று அனைத்துமே அடங்கும்.
ஒவ்வொரு துறையும், பல்வேறு காரணங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றன. பெரிய நிறுவனங்கள், தங்கள் கடன்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. சிறு, குறுந்தொழில்களோ, பெரிய வளர்ச்சியில்லாமல் தவிக்கின்றன.
ஏன் இந்த நிலைமை?
பொதுவாகவே, நுகர்வோரின் வாங்கும் சக்தி உயரும் போது, உற்பத்தி பெருகும். அதனால், தொழில் வளர்ச்சி மேம்படும். 2017 மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதமாக குறைந்துபோனதை இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். வளர்ச்சி பெருகவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆக, கொடுத்த கடன்களை வங்கிகளால் முழுமையாகத் திரும்பப் பெற முடியவில்லை. விளைவு, புதிய கடன்களைக் கொடுத்தால் மென்மேலும் அது வாராக் கடன்களாக மாறிவிடுமோ என்ற அச்சம்.
நுகர்வோரின் வாங்கும் சக்தி ஏன் உயர வில்லை? உண்மையில் உயரவே இல்லையா? அப்படிச் சொல்ல முடியாது. தொழில் நிறுவனங்களும் ஆய்வு அமைப்புகளும் எதிர்பார்க்கும் வேகத்தில் அது வளரவில்லை. இந்திய மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு உணர்வு மெச்சத்தக்கது. அவர்கள் தங்கள் வருவாயை சேமிப்புகளாக மாற்றவே விரும்புகின்றனர். வங்கிகளில் உயர்ந்துள்ள சேமிப்புகளும் தங்க நகை விற்பனையுமே இதற்குச் சான்று.
இன்னொரு செய்தியும் கவனிக்கத்தக்கது. மார்ச் 2017 உடன் முடிந்த காலாண்டில், பொதுத் துறை வங்கிகள் கொடுத்த கடன் தொகைதான் சரிந்தனவே தவிர, தனியார் வங்கிகள் கொடுத்த கடன்கள் பெருமளவு குறையவில்லை. மேலும், இந்தக் காலகட்டத்தில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வாயிலாக கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். அங்கே, கடன் பெறுவது ஏதோ ஒருவகையில் எளிமையாக இருந்திருப்பது கண்கூடு.
பொதுத்துறை வங்கிகள் செய்த ஒரு புத்திசாலித்தனமான வேலையை மெச்சுவது அவசியம். அவை பெருநிறுவனங்களுக்கு நேரடியாக கடன்கள் வழங்கவில்லையே தவிர, அவை வெளியிட்ட கடன் பத்திரங்களில் பெருமளவு முதலீடு செய்திருக்கின்றன. ஆர்.பி.ஐ., அனுமதியோடு வெளியிடப்படுவை தனியார் கடன் பத்திரங்கள். அதில் முதலீடு செய்வதன் மூலம், மூலதனத்துக்கும் உத்தரவாதமுண்டு, வட்டிக்கும் உத்தரவாதமுண்டு.
வங்கிக் கடன்கள் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும்?
இரண்டு காரணங்கள். அதன் மூலம், தொழில்துறை பெருகும், உற்பத்தி பெருகும், வளர்ச்சி பெருகும். அதைவிட முக்கியமாக வேலைவாய்ப்புகள் பெருகும். கடந்த மூன்றாண்டுகளாக வேலைவாய்ப்புகள் போதிய அளவு பெருகவில்லை என்பதற்கு அடிப்படை காரணங்களில் ஒன்று தனியார் துறை முதலீடுகள் பெருகவில்லை, வங்கித் துறை கடன்கள் பெருகவில்லை என்பது.
வங்கிகளின் கடன் வளர்ச்சியை உயர்த்துவது எப்படி?
வேறு வழியே இல்லை. இதுநாள்வரை வங்கிகளில் தேங்கிப் போயுள்ள வாராக் கடன்களை ஒட்டுமொத்தமாக தலைமுழுகிவிட வேண்டியதுதான். ஒழுங்காக வரி கட்டியவர்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். மக்கள் பணத்தை சுருட்டியவர்கள் முதற்கொண்டு, உண்மையிலேயே கடன்களைக் கட்டமுடியாத ஏழை விவசாயிகள் வரை அனைவரும் இதனால் பயன் அடைவர். கணக்குப் புத்தகங்களில் இருந்து கடன் எனும் பெருஞ்சுமை நீங்கினால்தான், வங்கிகளுக்கு மீண்டும் கடன் கொடுக்க துணிவு வரும். வீட்டுக்குள் இருக்கும் பாம்புப் புற்று, கடன். அதை இடித்துத் தரை மட்டமாக்கினால்தான் நிம்மதியாக வாழ முடியும். இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். அதனால் விவசாய வளம்பெருகும், மக்களின் நம்பிக்கையும் வாங்கும் சக்தியும் உயரும் என்று கணிக்கப்படுகிறது. மக்களின் நம்பிக்கை பெருகினால் மட்டுமே இந்திய வளர்ச்சி உயரும்.
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|