பதிவு செய்த நாள்
14 ஜூன்2017
23:51
மும்பை : ‘இந்தியாவில், இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கு, மக்களிடம் மவுசு அதிகரித்து வருகிறது’ என, சந்தை ஆய்வு நிறுவனமான, ‘நீல்சன்’ தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: தனிநபர் பராமரிப்பு பொருட்கள் துறையில், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் பிரிவின் சந்தை மதிப்பு, 2016ல், 18,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சோப்பு, ஷாம்பு, கேச பராமரிப்பு எண்ணெய் உள்ளிட்ட, தனிநபர் பராமரிப்பு பொருட்களின் சந்தை மதிப்பு, 44,790 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதில், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மூலிகை பொருட்களில் தயாரிக்கப்படும், தனிநபர் பராமரிப்பு பொருட்கள் பிரிவு, 41 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. மக்களுக்கு, ஆயுர்வேதம், இயற்கை மூலிகை பொருட்கள் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
அதனால், சில ஆண்டுகளாக, இவ்வகை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும், தனிநபர் பராமரிப்பு பொருட்களை வாங்குவதும் அதிகரித்து வருகிறது. தனிநபர் பராமரிப்பு பொருட்கள் சந்தை, ஆண்டுக்கு, 6.6 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. அதில், இயற்கை சாராத பராமரிப்பு பொருட்களின் பங்கு, நான்கு ஆண்டுகளில், ஆண்டுக்கு, 1 சதவீதம் குறைந்து வருகிறது.
இதே காலத்தில், இயற்கை பொருட்களின் பங்கு, இதே அளவிற்கு உயர்ந்து, 37 சதவீதத்தில் இருந்து, 41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இயற்கை மூலிகைகளில் தயாரிக்கப்படும் தனிநபர் பராமரிப்பு பொருட்களில், கேச பராமரிப்பு எண்ணெய், 34 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், குளியல் சோப்பு, 30 சதவீதம்; முக பராமரிப்பு பொருட்கள், 13 சதவீதம்; பற்பசை, 11 சதவீதம்; ஷாம்பூ, 7 சதவீதம்; கை மற்றும் உடலில் பூசும் கிரீம், 6 சதவீதம் என, ஆகியவை உள்ளன.
வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இயற்கை பராமரிப்பு பொருட்களில், பற்பசை, 20.1 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, கை மற்றும் உடலில் பூசும் கிரீம், 17.5 சதவீதம்; ஷாம்பூ, 13.2 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளன. மருந்து கடைகள் மற்றும் வலைதளங்களில், தனிநபர் இயற்கை பராமரிப்பு பொருட்கள் விற்பனை வளர்ச்சி, 19.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இயற்கை சாரா பராமரிப்பு பொருட்களில், 9.8 சதவீதமாக உள்ளது. இப்பொருட்களின் விலையும், இயற்கை பராமரிப்பு பொருட்களை விட, 17 சதவீதம் அதிகம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்னகம் முன்னணி:
தனிநபருக்கான இயற்கை பராமரிப்பு பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில், தென் மாநிலங்கள், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகியவை முன்னணியில் உள்ளன. இப்பொருட்கள் தயாரிப்பில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு, முறையே, 79 மற்றும் 21 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|