பதிவு செய்த நாள்
15 ஜூன்2017
23:53
புதுடில்லி : வணிக நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர், தற்போதைய, ‘வாட்’ வரி விதிப்பில் இருந்து, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்கான கெடு, நேற்றுடன் முடிந்த நிலையில், மீண்டும், வரும், 25ல், பதிவு நடைமுறை துவங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி., வரி நடைமுறைக்கான பணிகளை, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைவர் நவின் குமார் கூறியதாவது: நாட்டில் தற்போது, 80 லட்சம் பேர், உற்பத்தி வரி, சேவை வரி, ‘வாட்’ வரி செலுத்தி வருகின்றனர். இவர்களில், இதுவரை, 66 லட்சம் பேர் தான், ஜி.எஸ்.டி.,க்கு மாறி உள்ளனர். எஞ்சியோர், கெடு முடிந்துவிட்டது குறித்து பீதியடைய வேண்டாம். வரும், 25ல், மீண்டும் பதிவுப் பணி துவங்க உள்ளது. அப்போது, விடுபட்டவர்கள், உரிய விபரங்களை அளித்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறலாம்.
ஜி.எஸ்.டி., பதிவில், இரு கட்டங்கள் உள்ளன. வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் நுழைந்து பதிவுக்கு விண்ணப்பித்த உடன், அவர்களுக்கு தற்காலிக, ஜி.எஸ்.டி.என்., பதிவு எண் வழங்கப்படும். அடுத்தகட்டமாக வர்த்தகம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். இதையடுத்து, டிஜிட்டல் கையொப்பம் வாயிலாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் போனிற்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் மூலமாகவோ, ஜி.எஸ்.டி.,யில் இணைந்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது, 30 லட்சம் பேர், இரண்டாம் கட்ட நடைமுறையை முடிக்காமல் உள்ளனர். இது குறித்து, அவர்களுக்கு, மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாதவர்கள், ஜூலை, 1 முதல் விற்பனை பொருட்களுக்கு செலுத்தப்பட்ட உள்ளீட்டு வரியை, திரும்பப் பெற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|