பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
23:46
புதுடில்லி : இந்தியா, தெற்காசிய பிராந்திய நாடுகளின், ‘ஸ்டார்ட் அப்’ தொழில் துறை மாநாட்டை, வரும் டிசம்பரில் நடத்த திட்டமிட்டு உள்ளது.
இந்த மாநாடு, ஸ்டார்ட் அப் துறையில் புதிய உத்திகள், வர்த்தக வாய்ப்புகள், முதலீட்டு திட்டங்கள் ஆகியவை குறித்த பரஸ்பர விவாதத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘பிளிப்கார்ட், ஓலா, ஸ்நாப்டீல்’ போன்றவை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன.
ஸ்டார்ட் அப் துறை சார்ந்த அனைத்து விபரங்களையும், ஒரே இடத்தில் அறிந்து கொள்ள, ‘ஸ்டார்ட் அப் இந்தியா விர்ச்சுவல் ஹப்’ என்ற பிரத்யேக வலைதளத்தை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்து பேசியதாவது:
ஸ்டார்ட் அப் துறையில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் கூடி, கருத்துக்களை பரிமாறிக் கொண்டு, பரஸ்பர வளர்ச்சி காணும் சந்தையை உருவாக்க உள்ளோம். அதன் ஒரு பகுதியாக, தற்போது, இந்த வலைதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வர்த்தக வாய்ப்புகள், வல்லுனர்களின் ஆலோசனைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் வளர்ப்பகங்கள், அரசு உதவிகள் குறித்த அனைத்து விபரங்களையும் பெறலாம்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதில் பயிற்சி பெறவும், நிதியுதவி கோரவும், இத்தளம் வாய்ப்பளிக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்க விரும்பும் தொழில்முனைவோருக்கு, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உதவுமாறு, அனைத்து, எம்.பி.,க்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன். இத்திட்டத்தில், நான், மங்களூரில், ஸ்டார்ட் அப் பணிக்கூடத்தை அமைக்க நிதி ஒதுக்கி உள்ளேன்.
‘அடல் புதுமை திட்டம்’ மூலம், தேர்ந்தெடுத்த பள்ளிகளில், ஆய்வுக் கூடங்கள் அமைக்கவும் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தியா – ஜெர்மனி இடையே, ஸ்டார்ட் அப் உத்திகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது போல, ‘சார்க்’ நாடுகள் உடனும், ஸ்டார்ட் அப் துறை சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, பரஸ்பரம் முன்னேற வழி காணப்படும்.
இதற்காக, இந்தியா தலைமையில், ‘சார்க்’ நாடுகளின் ஸ்டார்ட் அப் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த கருத்துக்களை, அடுத்த இரு மாதங்களில், வர்த்தக அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தினால், டிசம்பரில் மாநாடு நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
‘சார்க்’ எனப்படும், தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
உலகளவில் அதிக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உள்ள நாடுகளில், அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|