பதிவு செய்த நாள்
29 ஜூன்2017
04:43
நான், திருப்பூரில் ஜாப் ஒர்க் எடுத்து செய்து வருகிறேன். என் போன்ற ஜாப் ஒர்க் எடுத்து செய்பவர்கள், கட்டாயம், ஜி.எஸ்.டி., பதிவு செய்தாக வேண்டுமா?– மால்வண்ணன், திருப்பூர்
ஜாப் ஒர்க் ஒரு சேவை என்பதால், உங்களது மொத்த வருமானம், ஜி.எஸ்.டி., வரிக்கான ஆரம்ப நிலையான, 20 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில், நீங்கள், ஜி.எஸ்.டி., பதிவை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். உங்களது மொத்த வருமானம், 20 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.
விற்பனைக்கு பின் தள்ளுபடி வழங்கினால், அதற்கான, ஜி.எஸ்.டி., வரியை குறைத்து கொள்ள முடியுமா?– சாஹிப், ஆரணி
முடியும். பொருள் வாங்குபவரும், தன் உள்ளீட்டு வரியை (இன்புட் டேக்ஸ்) குறைத்துக் கொண்டால், நீங்கள் தள்ளுபடிக்கான, ஜி.எஸ்.டி., வரியை குறைத்து கொள்ளலாம்.
என் விற்பனை பட்டியலில், சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., சேர்த்து வசூலித்தால், அவற்றை மத்திய மற்றும் மாநில அரசிற்கு தனித்தனியே செலுத்த வேண்டுமா?– கிருஷ்ணன், கோவில்பட்டி
வேண்டாம். நீங்கள் வசூலித்த, மத்திய மற்றும் மாநில, ஜி.எஸ்.டி., (சி.ஜி.எஸ்.டி., + எஸ்.ஜி.எஸ்.டி.,) வரியை, உள்ளீட்டு வரி பயன் பெற்று, மீதமுள்ள தொகையை, ‘ஆன்லைன்’ மூலம் செலுத்தலாம். நீங்கள் செலுத்த வேண்டிய வரி மாதம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், வங்கி மூலம் பணமாக செலுத்தலாம்.
நான், ஜாப் ஒர்க் பணிக்காக, மூலதன பொருட்களை அனுப்பி உள்ளேன். ஜூலை, 1ல், அத்தகைய பொருட்களை திரும்ப எடுத்து கொள்ள வேண்டுமா? இல்லையேல், அதற்கும், ஜி.எஸ்.டி., உண்டு என, கூறுகின்றனர். இதை பற்றி விளக்கமாக கூறவும்.– விமல், ஓசூர்
ஜூலை, 1ம் தேதியே, நீங்கள் பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. ஜி.எஸ்.டி., அமல்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நாளான, ஜூலை, 1லிருந்து ஆறு மாதங்களுக்குள், உற்பத்தியாளரின் தொழில் நடக்கும் இடத்துக்கு, திரும்பக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என, விதி உள்ளது. அவ்வாறு சேர்க்கவில்லையெனில் மட்டுமே, அந்த பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., வரி உற்பத்தியாளரிடமிருந்து பெறப்படும்.
என் நிறுவனம், மத்திய சேவை வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாநில வரியான, எஸ்.ஜி.எஸ்.டி., வசூல் செய்ய, ‘வாட்’ வரிக்காக புதிதாக பதிவு செய்ய வேண்டுமா?– ராஜசேகரன், அரக்கோணம்
அவசியமில்லை. வரி செலுத்துபவர் அல்லது விற்பனையாளர் அனைவருமே, ஜி.எஸ்.டி.,யில், புரவிஷனல் ஐ.டி., மூலம், ஜி.எஸ்.டி.ஐ.என்., நெட்வொர்க்கிற்கு மாற முடியும்.
நான், ஜி.எஸ்.டி.,யில் புரவிஷனல் ஐ.டி., பெற்று விட்டேன். என் விற்பனை பட்டியலில் பொருட்கள் வாங்குபவரின், ஜி.எஸ்.டி., எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டுமா? அவர், ஜி.எஸ்.டி., எண் பெறவில்லை என்றால், எனக்கு பாதிப்பு உண்டா? தயவுகூர்ந்து விளக்கவும்.– ராஜன் டோமினிக், நாமக்கல்
நீங்கள், ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற நபருக்கு விற்பனை செய்தால், அவசியம், அவரின், ஜி.எஸ்.டி., எண்ணை (ஜி.எஸ்.டி.ஐ.என்.,) உங்களது விற்பனை பட்டியலில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் மட்டுமே, வாங்குபவரால் உள்ளீட்டு வரி பயனை பெற முடியும்.நீங்கள், ஜி.எஸ்.டி., பதிவு பெறாத நபருக்கு விற்பனை செய்தால், ஜி.எஸ்.டி., எண்ணை குறிப்பிட முடியாது. அவ்வளவு தான். மற்றபடி, அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஐயா, நாங்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறோம். கல்வி சேவையும், ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருமா?– இன்பராஜ், சென்னை
பள்ளிக்கல்வி சேவைக்கு, ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், கல்விச் சேவை அல்லாத சில சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு உண்டு.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|