பதிவு செய்த நாள்
15 ஜூலை2017
00:52
புதுடில்லி : ‘‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சரக்கு மற்றும் சேவை வரிக்கு அஞ்சாமல், முறையாக பதிவு செய்து கொண்டு பயன்களை பெற வேண்டும்,’’ என, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வலியுறுத்தி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும், தீர்வு அளிப்பதற்கான பிரிவுகள், நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய வரி விதிப்பை கண்டு, யாரும் அஞ்ச வேண்டியதில்லை. அனைத்து நிறுவனங்களும், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் பதிவு செய்து கொண்டு, சரக்கு மற்றும் சேவை வரி பயன்களை பெற வேண்டும். இந்த புதிய வரி விதிப்பை, நிறுவனங்கள் சங்கடமாக கருதாமல், வர்த்தக வளர்ச்சிக்கு கிடைத்துள்ள வாய்ப்பாக எண்ண வேண்டும்.
இந்த புதிய வரி நடைமுறை, நிறுவனங்களின் வரிச்சுமையை குறைப்பதுடன், வரித்துறை அதிகாரிகளின் தேவையற்ற கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இது மிக முக்கியமான, மிகப்பெரிய வரி சீர்திருத்தம் ஆகும். இந்த வரி விதிப்பு குறித்து, அனைத்து தரப்பினரும் அறிந்து பயன்பெறும் வகையில், நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., பயிற்சி பட்டறைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை, 12 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் முனைவோர்களுக்கு, அமைச்சகத்தின் கள அலுவலகங்கள், பயிற்சி மையங்களில், ஜி.எஸ்.டி., குறித்து முழுமையான பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.
சமூக வலைதளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரி விதிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தயாரிப்பு மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளில், மேகக் கணினி வசதி, தகவல் மற்றும் தொடர்பு தொழிற்நுட்பம் போன்ற நவீன வசதிகளை புகுத்த வேண்டும். இதையொட்டி, ‘டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ., திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி வளர்ச்சி காண, இத்திட்டம் துணை புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
வேகம் வேண்டும்:
காதி துறையைச் சார்ந்த நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., தொடர்பான கோரிக்கைகளை, அமைச்சகத்திடம்அளித்துள்ளன. அவற்றுக்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் சார்ந்த பிரச்னைகளை தீர்ப்பதில் வேகம் காட்டுமாறு, அனைத்து வங்கிகளையும், அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.– கல்ராஜ் மிஸ்ரா மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|