பதிவு செய்த நாள்
17 ஜூலை2017
00:15
லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் இழப்பிற்கு வங்கிகள் பொறுப்பேற்காது என தெளிவுபடுத்தப்பட்ட நிலையில், லாக்கர் பாதுகாப்பு, வீட்டில் பாதுகாப்பு பெட்டகம் அமைப்பது, காப்பீடு பெறுவது ஆகியவை குறித்து ஒரு அலசல்.
நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பதை விட வங்கி லாக்கரில் வைத்திருப்பது பாதுகாப்பானது எனும் எண்ணத்தை அசைப்பது போல, கடந்த மாதம் இறுதியில் வெளியான செய்தி அமைந்தது. வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு வங்கிகள் பொறுப்பேற்காது என, ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது. ஆர்.டி.ஐ., கோரிக்கை ஒன்றுக்கு அளித்த விளக்கத்தில், லாக்கர் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு என, ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகள் தெரிவித்திருந்தன.
யார் பொறுப்பு?
இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்பிற்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு என்றால் லாக்கர் வசதி எதற்கு எனும் கேள்வியும் இயல்பாக எழுகிறது. லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்பிற்கு வங்கிகள் பொறுப்பேற்காது என்றால், ‘ஹோம் சேப்’ எனப்படும் பாதுகாப்பு பெட்டக வசதியை, வீட்டிலேயே அமைத்துக்கொள்ளலாம் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.
தற்போது நவீன வசதிகள் கொண்ட பாதுகாப்பு பெட்டகங்கள் பலவித வடிவங்களில் கிடைப்பதால், வீட்டிலேயே பெட்டகம் அமைத்து நகைகள் உள்ளிட்டவற்றை அதில் வைக்கலாம் என கருதப்படுகிறது. எப்படியும் வங்கி லாக்கர் வசதி என்பது செலவு மிகுந்ததாகவே இருப்பதையும், சேவை கட்டணமாக ஆண்டுக்கு பல ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், பல வங்கிகள் லாக்கர் வசதி பெற வைப்பு நிதி பெற வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கின்றன.
இந்த சூழலில், பாதுகாப்பு பெட்டகம் வாங்கக் கூடியவர்கள் வீட்டிலேயே நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என, யோசனை கூறப்படுகிறது. ஆனால், அதிக அளவிலான பொருட்களை லாக்கரில் வைக்க விரும்புகின்றவருக்கு வீட்டு பாதுகாப்பு பெட்டக வசதி பொருத்தமாக இருக்காது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். வங்கிகள் பொருட்களின் பாதுகாப்பு ரிஸ்க் தொடர்பாக எச்சரித்தாலும், லாக்கர் பாதுகாப்பிற்கு அவை விரிவான ஏற்பாடுகளை செய்வதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கேளுங்கள்
லாக்கர்கள் பாதுகாப்பான சூழலில் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் லாக்கரை தேர்வு செய்யும் முன், வங்கிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, வங்கிகள் திருப்திகரமான அல்லது பொறுப்பான பதில் அளிக்காவிட்டால், வேறு வங்கிகளை நாட வேண்டும். வங்கி கடைசியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்போது புதுப்பித்தது என்று வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் பாதுகாப்பு பெட்டக வசதி அமைப்பது எளிது என்றாலும், இவற்றிலும் செலவு முக்கிய அம்சம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நவீன பெட்டகங்கள், அத்துமீறல் முயற்சி தொடர்பான மொபைல்போனுக்கு தகவல் தெரிவிக்கும் வசதி கொண்டுள்ளன. இவற்றின் விலை அதிகமாக இருக்கும்.
காப்பீடு வசதி
இதற்கு மாற்றாக தனியார் லாக்கர் வசதியை நாடலாம். பல தனியார் நிறுவனங்கள் லாக்கர் வசதியை அளிக்கின்றன. ஆனால், இவற்றுக்கான கட்டணம், வங்கி லாக்கர் கட்டணத்தை விட கூடுதலாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.எந்த லாக்கர் வசதியை தேர்வு செய்தாலும், நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு வசதி பெறுவது சிறந்தது என, வல்லுனர்கள் சொல்கின்றனர். நகைகளுக்கான காப்பீடு வசதி தனியே இருப்பதோடு, இல்ல காப்பீட்டின் கீழும், நகைகளுக்கான காப்பீட்டை பெறலாம் என்கின்றனர். வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் போது மற்றும் பயணத்தின் போதும் நகைகளுக்கு காப்பீடு பெறும் வசதி இருக்கிறது. அதே நேரத்தில் முதலீடு நோக்கில் தங்க நகை வாங்குபவர்கள், நகைகளுக்கு பதில் காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்து ரிஸ்க்கை குறைக்கலாம் என்றும் வல்லுனர்கள் ஆலோசனை அளிக்கின்றனர்.
எது பாதுகாப்பு?* ஹோம் சேப் வசதியை நாடலாம். தனியார் லாக்கர் வசதியும் இருக்கின்றன.* லாக்கர் பராமரிப்பு செலவுமிக்கது.* நகைகள் பாதுகாப்பிற்கு காப்பீடு பெறலாம்.* காகித வடிவ தங்க முதலீட்டை நாடலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|