பதிவு செய்த நாள்
17 ஜூலை2017
00:21
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது, வேலைவாய்ப்பு பெருகவில்லை என்பதுதான். சமீபத்தில் வெளியாகியுள்ள மூன்று தகவல்கள் நம்மை கொஞ்சம் நிம்மதியடைய வைக்கின்றன. ஆனால், அதிலிருந்து வேறு சில கவலைகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஜூன் மாதம் முடிவதற்குள், இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் எல்லாம் தம்மிடம் வேலைசெய்பவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, (பி.எப்.,) தொகையைச் செலுத்திவிட வேண்டும் அல்லது சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற மன்னிப்புத் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. சிக்கல்களைத் தவிர்க்க விரும்பிய நிறுவனங்கள், தாமாகவே முன்வந்து தம்மிடம் பணியாற்றும் பணியாளர்களின் விபரங்களை வழங்கியதோடு, வைப்பு நிதியையும் செலுத்தியுள்ளன. ஆச்சரியகரமான விபரம் இங்குதான் வெளிப்பட்டது.
அதாவது, ஜூன் இறுதியில் பி.எப்., பிடித்தம் செய்யப்படும், முறையாக வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, 3.8 கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து, 4.81 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒரு கோடி பேர், பி.எப்., கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதாவது, இவர்களெல்லாம் முன்னரே வேலையில்தான் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு, பி.எப்., பிடித்தம் செய்யப்படாமலிருந்தது. இப்போது அவர்களும் பி.எப்., வளையத்துக்குள் வந்துள்ளதால், இரண்டு மூன்று நன்மைகள். ஒன்று, அவர்களுக்கு சமூக ரீதியான பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு. இரண்டு, இந்தியாவில் முறையான வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளவர்களின் உண்மையான எண்ணிக்கை படிப்படியாக வெளியே வரத் துவங்கியுள்ளது.
தொழிலாளர் நலத்துறையின் கணக்குப் படி, 2016ல், இந்தியாவில் சுமார் 47.5 கோடி பேர் வேலை பார்க்கின்றனர். இதில் முறையான வேலைகளில் இருப்பவர்கள் பத்து சதவிகிதம் பேர்கள் மட்டுமே. இதுவும் தோராயமான கணக்குதானே அன்றி, துல்லியமான எண் அல்ல. இன்னொரு துல்லியமற்ற கணக்கும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருவது கண்கூடு. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் வேலைசெய்யத் தகுதியுள்ள, 15 முதல் 59 வயது வரையுள்ளோர், 1.2 கோடி பேர் வேலைச் சந்தைக்கு வருகின்றனர் என்றொரு கணக்கு சொல்லப்படுகிறது. இந்த வயதிலுள்ள எல்லாருமே வேலை தேடுவதில்லை. சிலர் மேற்படிப்பு, சுயதொழில் என்று நகர்ந்துவிடுகின்றனர். கிராமத்துப் பெண்கள் எல்லாரும் வேலைச் சந்தைக்கு வருவதில்லை. ஆக, இப்படிப்பட்ட விடுபடுதல்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், 60 லட்சம் பேராவது ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடி வருகின்றனர்.
இதிலும் பெருமளவு நகரம் சார்ந்த வேலைகளுக்கே அதிகம் பேர் வருகின்றனர். சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்க காலத்திலேயே ஏராளமானோர் கிராமங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததால், அருகில் உள்ள நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டனர். இப்போது நகரங்களில் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்றுதான் பார்க்க வேண்டும். உருவாக்கப்பட்டுள்ளன என்கிறது, ‘இந்திய நுகர்வுப் பொருளாதாரத்துக்கான மக்கள் ஆய்வு மையம்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. ஆனால், அந்த வேலைகள் எல்லாம் முறைசார்ந்த வேலைகள் அல்ல. அதாவது, எல்லாவகையான உரிமைகளுடன் கூடிய மாதாந்திர சம்பளம் வழங்கும் வழக்கமான உத்தியோகங்கள் அல்ல அவை. மாறாக ஒப்பந்தப் பணிகள் அல்லது அன்றாடக் கூலிகள்.
கடந்த, 2011 – 12 முதல் 2016 காலகட்டத்தில் முறையான சம்பளம் பெறும் வேலைகள் மிகப்பெரும் சரிவைச் சந்திக்க, சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கையும் பெருகவில்லை. மாறாக, ஒப்பந்தப் பணியாளர்களின் அளவே உயர்ந்துள்ளது. வேலையில் நிச்சயமின்மை இதன் உடன்பிறந்த சகோதரி.முறைசாரா ஒப்பந்தப் பணியாளர்கள் விஷயத்தில் இன்னொரு போக்கும் அதிகமாகி வருகிறது. எந்தவிதமான எழுத்துபூர்வமான ஒப்பந்தமும் இல்லாமல் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள் சுமார் 71 சதவிகிதம். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இதுதான் நிலைமை.
பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்குமான உறவு தொடர்ந்து மாறிவருகிறது. எந்தவிதமான நிரந்தரப் பொறுப்புகளையும் நிர்வாகங்கள் ஏற்க விரும்புவதில்லை.ஒவ்வொரு தனிநபரும் வேலைச் சந்தை கோரும் திறமைகளையும் தனித்துவங்களையும் வளர்த்துக்கொண்டு, தயாராக இருக்கவேண்டும். எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அங்கே வேலை செய்து சம்பாதித்துக்கொள்ள வேண்டும். கேட்கச் சிரமமாக இருந்தாலும் இதுதான் எதிர்காலம். இந்நிலையில், மத்திய அரசாங்கம், வேலை உத்தரவாதமுள்ள நிரந்தத்தன்மையுள்ள முறைசார்ந்த வேலைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தனியார் துறையும் இதேபோன்ற உத்தரவாதமுள்ள வேலைகளை உருவாக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில்.
உத்தரவாதம் தரமுடிகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் வேலைகளின் எண்ணிக்கையை, ஐ.டி., நிறுவனங்கள் பெருமளவு குறைக்கவில்லை என்பதுதான் மூன்றாவது நிம்மதியான செய்தி. ஜூன் மாதத்தோடு முடிந்த காலாண்டில், ஐ.டி., நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்களைப் பார்க்கும்போது இது உறுதியாகிறது. டி.சி.எஸ்.,சும் இன்போசிசும் உலகெங்கும் சுமார் 6 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளன. மார்ச் மாத இறுதியில் 5,87,587 ஆக இருந்த பணியாளர் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் சற்றே சரிந்து, 5,84,362 என்ற அளவுக்கு வந்திருக்கிறது.
புதிய ஆள்சேர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதோடு, பயிற்சி பொறியாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. புதிய வேலைகள் உருவாவது ஒருபக்கம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் பழைய வேலைகள் பறிபோகாமல் காப்பாற்றப்படுவதும் முக்கியமானதே. இந்த இடத்தில்தான் அரசின் கொள்கை ரீதியான தலையீடு முக்கியத்துவம் பெறுகிறது. நிடி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, வேலைவாய்ப்புகளை எப்படிச் சீராக, துல்லியமாகக் கணக்கிடுவது என்பது பற்றிய தனது ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ச்சியான பல்வேறு சர்வேக்கள், அரசுத் துறையில் ஏதேனும் ஒருவகையில் பதிவு செய்துகொண்டவர்களின் விபரங்கள் ஒருங்கிணைக்கப்படுவது போன்ற ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சர்வேக்கள் வெறும் கண்ணாடிகள்தாம். எதிரில் இருப்பவரின் புறத்தோற்றத்தைப் பிரதிபலிப்பதுதான் கண்ணாடி. ஆனால், கண்ணாடியை வைத்துக்கொண்டு அதன் எதிரேயுள்ள மனிதனின் ஆரோக்கியத்தை, எதிர்பார்ப்புகளை, அகத்தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அதற்குத் தேவை அக்கறையுள்ள அணுகுமுறை. வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பெருக, இளைஞர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்ப்பது இத்தகைய அக்கறையைத்தான்.
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|