பதிவு செய்த நாள்
19 ஜூலை2017
06:21
புதுடில்லி : ‘இந்திய மருந்து நிறுவனங்கள், சர்வதேச போட்டியை சமாளிக்க, ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு, அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை, இந்திய மருந்து நிறுவனங்களுக்கு சிரம தசை தான். அதே சமயம், எந்த நிறுவனம் வளரும் போதே, சர்வதேச தரத்தில் மருந்துகளை தயாரிக்க, தொடர்ந்து ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறதோ, அந்நிறுவனம் செழிக்கும். இது போன்ற நிறுவனங்கள் குறித்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பில்லை. அதனால், அவை, தரக் கட்டுப்பாடு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றி, வர்த்தகத்தை வலுப்படுத்திக் கொள்ளும்.
இந்திய மருந்து நிறுவனங்களுக்கு, மிக முக்கிய சந்தையாக உள்ள அமெரிக்காவில், தற்போது, மருந்து வினியோக துறையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் சூடுபிடித்து உள்ளன. மேலும், மூலக்கூறு மருந்து தயாரிப்பு துறையில் போட்டி அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, மருந்து விலையை நிர்ணயிக்கும் நிர்ப்பந்தத்தில், இந்திய நிறுவனங்கள் உள்ளதால், அவற்றின் லாப வரம்பும், வர்த்தக செயல்பாடுகளும் பாதிக்கும். இதை தவிர்க்க, இந்திய நிறுவனங்கள், கலவை மருந்துகள், தனிச் சிறப்பு மருந்துகள் ஆகியவற்றின் தயாரிப்பில் கவனம் செலுத்தக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பிரிவில், புதிய மருந்துகளுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. போட்டியும் அதிகம் இல்லை என்பதால், நிறுவனங்கள் சுதந்திரமாக விலையை நிர்ணயிக்க முடியும். இத்தகைய மருந்துகளின் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கு, குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்குவதன் மூலம், இந்திய மருந்து நிறுவனங்கள், வரும் காலத்தில் சிறப்பான வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவில், வர்த்தக பற்றாக்குறையை குறைக்க, வரி விதிப்புகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், இந்திய மருந்து நிறுவனங்களின் லாப வரம்பை பாதிக்கும். எனினும், ஆரோக்கிய பராமரிப்பு செலவை குறைக்கும், டிரம்ப் அரசின் முடிவு, மூலக்கூறு மருந்துகளுக்கான தேவையை அதிகரிக்கச் செய்யும். இதனால், இவ்வகை மருந்துகளின் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்திய மருந்து நிறுவனங்கள் பயனடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி:
கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், இந்தியாவின் மருந்து ஏற்றுமதி, 1,640 கோடி டாலராக உள்ளது. இதில், அமெரிக்காவின் பங்கு, 40.6 சதவீதம்; ஐரோப்பா, 19.7 சதவீதம்; ஆப்ரிக்கா, 19.1 சதவீதம்; ஆசியா, 18.8 சதவீதம் ஆக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|