பதிவு செய்த நாள்
21 ஜூலை2017
08:26
மும்பை : பொதுத் துறையைச் சேர்ந்த, ‘ஏர் – இந்தியா’ நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ள டாடா குழுமம், அந்நிறுவனத்திற்கு உள்ள கடனுக்கு என்ன தீர்வு என, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
டாடா ஏர்லைன்ஸ், இந்தியாவில் முதன்முறையாக, விமான போக்குவரத்தை மேற்கொண்ட நிறுவனம் என்ற சிறப்பை பெற்றது. இதன் முதல் விமான போக்குவரத்து, 1932ல், கராச்சி – மும்பை இடையே நடைபெற்றது. 1952ல், டாடா ஏர்லைன்ஸ், நாட்டுடைமை ஆக்கப்பட்டு, ஏர் – இந்தியா என, பெயர் மாற்றம் கண்டது. 2007ல், ஏர் – இந்தியா, அதன், இந்தியன் ஏர்லைன்ஸ் துணை நிறுவனத்தை இணைத்துக் கொண்டது.
அது முதல், ஏர் – இந்தியா, தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தை கைதுாக்கி விட, 2012ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. இருந்த போதிலும், ஏர் – இந்தியாவின் இழப்பு, தொடர்கதையாக உள்ளது. இந்நிறுவனம், தற்போது, 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.
அதனால், பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவைக் குழு, ஜூன் மாதம், ஏர் – இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, டாடா குழுமம், ஏர் – இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக, டாடா சன்ஸ் தலைவர், என்.சந்திரசேகரன், மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி உள்ளார். அப்போது, ஏர் – இந்தியாவின் கடன் பிரச்னைக்கு, மத்திய அரசு என்ன தீர்வு வைத்துள்ளது என, கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஏர் – இந்தியா கடன் பிரச்னைக்கு, என்ன திட்டம் உள்ளது என, டாடா குழுமம் கேட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு விரைவில் பதிலளிக்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|