பதிவு செய்த நாள்
21 ஜூலை2017
08:31
மும்பை : ‘அமலுக்கு வந்துள்ள, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட விதிகள் காரணமாக, சிறிய கட்டுமான நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் என்பதால், புதிய குடியிருப்பு திட்டங்கள் குறைய வாய்ப்பு உள்ளது’ என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், மே, 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது, கட்டுமான நிறுவனங்களுக்கும், வீடு வாங்குவோருக்கும் இடையே, ஒளிவுமறைவற்ற நடைமுறைக்கு வழிவகுக்கிறது. நீண்ட கால அடிப்படையில், இந்த சட்டம், ரியல் எஸ்டேட் துறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். கட்டுமான நிறுவனங்கள் மீது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க துணை புரியும். எனினும், குறுகிய கால அடிப்படையில், புதிய சட்டத்தின் விதிமுறைகளால், சிறிய கட்டுமான நிறுவனங்களின் செயல்பாடுகள் மந்தமாக வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவைகள் அதிகரிக்கும் என்பதால், நடப்பு நிதியாண்டில், புதிய குடியிருப்பு திட்டங்களின் அறிமுகம் குறையும். இந்த சட்டத்தின்படி, அனைத்து கட்டுமான நிறுவனங்களும், அந்தந்த மாநிலங்களின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிய குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்யும் முன், அப்பணிகளை துவக்கியதற்கான சான்றிதழை, கட்டுமான நிறுவனங்கள் பெற வேண்டும். இது, குடியிருப்பு விற்பனைக்கும் பொருந்தும். கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்தப்படி குறித்த காலத்தில் வீடுகளை, உரிமையாளரிடம் ஒப்படைக்க தவறினால், வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள், இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அதனால், இனி கட்டுமான நிறுவனங்கள், வாடிக்கையாளரின் முன்பணத்தில், குடியிருப்பு திட்டங்களை துவக்க முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக, சிறிய கட்டுமான நிறுவனங்களின் நிதிச்சுமை அதிகரிக்கும். குறிப்பாக, அமைப்பு சாராத கட்டுமான நிறுவனங்கள் பாதிக்கப்படும். அவை, நாளடைவில், பெரிய நிறுவனங்களின் கீழ் இணையவும் வாய்ப்புள்ளது.
அதே சமயம், பெரிய நிறுவனங்கள் அவற்றின் வலிமையான நிதி ஆதாரம், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மூலம், விதிமுறைப்படி குடியிருப்பு திட்டங்களை நிறைவேற்றும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், இம்மாத இறுதிக்குள், அனைத்து மாநிலங்களின் ரியல் எஸ்டேட் ஆணையங்களில், கட்டுமான திட்டங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், ஒருசில மாநிலங்கள் மட்டுமே, ரியல் எஸ்டேட் ஆணையத்தை அமைத்துள்ளன. பல மாநிலங்கள், இன்னும் ஆணையம் அமைக்காமல் உள்ளன. இம்மாநிலங்களில் குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், கட்டுமான நிறுவனங்களை பாதிக்கும். கட்டுமான திட்டங்களை, குறித்த காலத்தில் நிறைவேற்றக் கூடிய திறன் கொண்ட கட்டுமான நிறுவனங்களின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏதும் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|