பதிவு செய்த நாள்
23 ஜூலை2017
01:43
ஏற்றுமதி செய்யும் போது உள்ள வழிமுறைகள், ஜி.எஸ்.டி., சட்டம் வந்த பின் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதா?--– கனகவேல், சென்னை
ஆம். தற்போது, ஏற்றுமதி செய்யும் போது உள்ள வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. ஆவணங்களின் பதிவு, வழிமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும். இதற்கு முன், தாக்கல் செய்த, ஏ.ஆர்.இ., -1 மற்றும் ஏ.ஆர்.இ., -2 படிவங்கள், தற்போது தாக்கல் செய்யத் தேவையில்லை. ‘ஷிப்பிங் பில்’ மட்டும் இருந்தால் போதுமானது.
எஸ்.இ.இசட்., எனப்படும், சிறப்பு பொருளாதார மண்டல பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு, வழங்கல் செய்ய வேண்டுமெனில், கண்டிப்பாக, ஜி.எஸ்.டி., பதிவு பெற்றிருக்க வேண்டும் என, கூறுகின்றனர். இதை சற்று விளக்கவும்.– ஜலாலுதீன், ஐதராபாத்
சிறப்பு பொருளாதார மண்டலமானது, தனி அங்கீகாரம் பெற்றுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழங்கக் கூடிய வழங்கல்கள், வெளி மாநில வழங்கலாக கருதப்படும். எனவே, பதிவு பெற்ற நபர் மட்டுமே, வெளி மாநில வழங்கலில் ஈடுபட முடியும் என்பதால், இத்தகைய பரிவர்த்தனைக்கு, ஜி.எஸ்.டி., பதிவு அவசியம்.
நாங்கள், பொருட்களை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். அத்தகைய பொருட்களை, மீண்டும் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுகிறோம். ஜி.எஸ்.டி., சட்டத்திற்கு முன், இத்தகைய பரிவர்த்தனைக்கு வரியை திரும்ப பெறும் சலுகை இருந்தது. ஜி.எஸ்.டி., வந்த பின், அத்தகைய சலுகை தொடருமா? ஜி.எஸ்.டி.,க்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை, ஜி.எஸ்.டி.,க்கு பின் ஏற்றுமதி செய்தோமானால், அத்தகைய பயன் கிடைக்குமா?– கந்தசாமி, பெங்களூரு
ஜி.எஸ்.டி.,க்கு முன் இருந்த அனைத்து சலுகைகளும் கிடைக்க பெறும். ஜி.எஸ்.டி., வந்த பின்னரும் கூட, வரியை திரும்ப பெறும் சலுகை தொடரும். இறக்குமதியின் போது செலுத்திய, ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., மற்றும் காம்பென்சேஷன் செஸ் வரியை, ‘ரீபண்டு’ ஆக திரும்ப பெறலாம்.
சார், நான் உணவகம் வைத்துள்ளேன். கலவை வரி திட்டத்தை தேர்வு செய்தால், 5 சதவீதம், சி.ஜி.எஸ்.டி., மற்றும் 5 சதவீதம், எஸ்.ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டுமா?– வாகை, அருப்புக்கோட்டை
உணவகம் வைத்திருக்கும் ஒரு நபர், கலவை வரி திட்டத்தை தேர்வு செய்யும் போது, மொத்தமாக சலுகை வரியான, 5 சதவீதத்தை செலுத்தினால் போதும். இத்தகைய வரி சதவீதம், சி.ஜி.எஸ்.டி., 2.5 சதவீதமாகவும், எஸ்.ஜி.எஸ்.டி., 2.5 சதவீதமாகவும் பிரிக்கப்பட்டு செலுத்த வேண்டும்.
நான், கலவை வரி திட்டத்தை தேர்வு செய்துள்ளேன். என் வழங்கலின் விலைப் பட்டியலில், மாற்றம் ஏதேனும் செய்ய வேண்டுமா?– குணநிதி, விழுப்புரம்
ஆம். உங்களின் விலைப் பட்டியலில், ‘டேக்ஸ் இன்வாய்ஸ்’ என, குறிப்பிடுவதற்கு பதில், ‘பில் ஆப் சப்ளை’ எனக் குறிப்பிட்டு, வரி வசூல் செய்யாமல் வழங்க வேண்டும்.
நான், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என் காரை, தற்போது, 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளேன். இதில், ஜி.எஸ்.டி., உண்டா? இந்த காரை, என் நிறுவனம் வாங்கினால், அதற்கு நிறுவனம் வரி செலுத்த வேண்டுமா?– வெங்கட்ராமன், சென்னை
இத்தகைய பரிவர்த்தனை வியாபாரத்தின் போதோ அல்லது அதன் முன்னேற்றத்திற்காகவோ நடத்தப்படும் வழங்கலாக கருதப்பட மாட்டாது. எனவே, இதில், ஜி.எஸ்.டி., இருக்காது. உங்கள் நிறுவனம், உங்களிடமிருந்து காரை வாங்கினாலும், அதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
நாங்கள், தமிழகத்தில் எங்களது நிறுவனம் மூலம், பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம். தனியாக எங்கள் பொருட்களையும், இதர பொருட்களையும் விற்பனையும் செய்து வருகிறோம். இப்போது, நாங்கள் உற்பத்திக்கு தனியாகவும், விற்பனைக்கு தனியாகவும், ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்டுமா?– சாரதா, காஞ்சிபுரம்
நீங்கள், இரு பதிவு பெற வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரே, ஜி.எஸ்.டி., எண் பெற்று உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை என, அனைத்து வழங்கல்களிலும் ஈடுபடலாம்.
நான், கலவை வரி நிலையை தேர்வு செய்துள்ளேன். என் ஆண்டு மொத்த விற்பனை, 75 லட்சம் ரூபாயை தாண்டும் போது, நான் ஆண்டு முடிவு வரை, கலவை வரி நிலையிலேயே தொடர முடியுமா?– கோபி, ஆரணி
அவ்வாறு தொடர முடியாது. உங்கள் ஆண்டு விற்பனை, 75 லட்சம் ரூபாயை தாண்டும் போது, நீங்கள் சாதாரண வரி திட்டத்திற்கு மாறி விடுவீர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|