பதிவு செய்த நாள்
25 ஜூலை2017
06:47
எஸ்.இ.இசட்., என்று சொல்லக்கூடிய, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, ஏற்றுமதியை உயர்த்துவதற்காகத்தான். ஆனால், தற்போது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மீது, ஜி.எஸ்.டி., விதித்தால் அது எவ்வாறு ஏற்றுமதியை மேம்படுத்தும்?– கோகுல் சந்தர், டி.சி.எஸ்.,சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனத்துக்கோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் நிறுவனத்திற்கோ சப்ளை செய்யும்போது, அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படாது. அத்தகைய பரிவர்த்தனை, ஜீரோ ரேட்டேட் (பூஜ்ஜிய சதவீதம்) சப்ளை என, கருதப்படும். இதனால் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இது ஏற்றுமதியையும் பாதிக்காது.
ஐயா, நாங்கள் புதிதாக, ஜி.எஸ்.டி., விண்ணப்பிக்க உள்ளோம். அதன் வழிமுறைகளை விளக்கவும். உங்களின், ‘கேள்விகள் ஆயிரம்’ பகுதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது, அதற்கு நன்றி.– கிருபாகரன், காரைக்குடிநீங்கள், www.gst.gov.in என்ற இணையதளத்தின் மூலம், இலவசமாக, ஜி.எஸ்.டி., புதிய பதிவிற்கு விண்ணப்பிக்கலாம். ஜி.எஸ்.டி., (ஆர்.இ.ஜி., 1) எனும் படிவத்தின் மூலம், மின்னணு முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த, மூன்று வேலை நாட்களுக்குள், உங்களது, ஜி.எஸ்.டி., பதிவை பெறலாம். ஒருவேளை, விண்ணப்பத்தில் குறைபாடுகள் இருப்பின், அதை சரி செய்து விண்ணப்பித்த, 20 நாட்களுக்குள், ஜி.எஸ்.டி., பதிவை பெற்றுவிடலாம்.
சார், ஜி.எஸ்.டி.,க்கு முன் விற்பனை செய்த பொருட்களுக்கு, ‘வாரன்டி’யின் அடிப்படையில், பழுதாகிய உதிரி பாகங்களை, இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு தற்போது அளித்தால், அத்தகைய பரிவர்த்தனைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுமா?– சசிதரன், திருச்சிநீங்கள், ‘வாரன்டி’யின் கீழ் இலவசமாக பொருட்களை வழங்கும் காரணத்தால், ஜி.எஸ்.டி., விதிக்கப்பட மாட்டாது. ஆனால், இலவசமாக வழங்கிய பொருட்களுக்கு, உங்களால் உள்ளீட்டு வரி பயன் பெற இயலாது.
நான், ஜவுளி உற்பத்தியில் உள்ளேன். கொள்முதல் செய்யும் போது, நுாலுக்கு, 18 சதவீத வரியும், அதை, ஆடையாக விற்பனை செய்யும் போது, 5 சதவீத வரியிலும் விற்பனை செய்கிறேன். என் ஆண்டு பரிவர்த்தனையை கணக்கில் கொள்ளும் போது, கொள்முதல் செய்யும் போது செலுத்திய, 18 சதவீத வரி அதிக தொகையாக இருக்கும். அதை, ‘ரீபண்டு’ ஆக பெற்றுக் கொள்ள முடியுமா?– தீனதயாளன், திருப்பூர்சில விதிவிலக்கான சமயங்களில் பொருட்களை வாங்கும் போது, அதிக சதவீதத்திலும், பொருட்களை விற்கும் போது, குறைந்த சதவீதத்திலும் வரி விதிக்கப்படும். கொள்முதல் செய்யும் போது செலுத்திய வரி, உங்களுக்கு உள்ளீட்டு வரி பயனாக கிடைக்க பெறும். ஆனால், அதை, ‘ரீபண்டு’ ஆக திரும்ப பெற இயலாது. அது உங்களுடைய, ஜி.எஸ்.டி., கணக்கில், ஐ.டி.சி., பயனாக இருக்கும். அதை, எப்போது வேண்டுமானாலும் வரி செலுத்த உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
ஐயா, நாங்கள், செம்பினால் செய்த பாத்திரங்கள் மற்றும் சமையலறை உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையும் செய்கிறோம். இதில், எத்தனை சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும்?– சங்கர், உமையாள்புரம்இதற்கு நீங்கள், 18 சதவீதம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டும்.
சார், வருமான வரி சட்டத்தில் உள்ளது போல், நுகர்வோருக்கு தனி சதவீத வரி, நிறுவனங்களுக்கு தனி சதவீத வரி என, ஜி.எஸ்.டி., சட்டத்தில் இல்லையா?– கிருஷ்ணகுமார், திருவாரூர்ஜி.எஸ்.டி., சட்டமானது, ஒரு மறைமுக வரி அமைப்பாகும். இது, ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்ற கோட்பாட்டிற்கு இணங்க, நாடு முழுவதும் ஒரு பொருளின் மீது பாரபட்சம் இல்லாத, குறிப்பிட்ட ஒரே சதவீத வரி விதிக்கப்படும். எனவே, இந்த சட்டத்தில் வருமான வரி சட்டத்தில் உள்ளது போல், நுகர்வோர் மற்றும் நிறுவனம் என்ற பாகுபாடு இல்லை.
சார், நாங்கள், எரிபொருளாக உபயோகப்படுத்தப்படும் விறகுகளை, மொத்தமாக, பல கிராமங்களிலிருந்து வாங்கி, தமிழகத்தில் பல இடங்களுக்கு அனுப்பி வருகிறோம். எங்களது ஆண்டு மொத்த விற்பனை, சராசரியாக, 30 லட்சம் ரூபாய் – 35 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இதற்கு நாங்கள், எத்தனை சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும்?– காமராஜ், கோவைஎரிபொருளாக உபயோகப்படுத்தும் விறகுகளுக்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நீங்கள், விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை, உள் மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்பவராக இருப்பின், நீங்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய தேவையில்லை.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|