பதிவு செய்த நாள்
25 ஜூலை2017
06:52
புதுடில்லி : தனியார் நிறுவன தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோர், நடுத்தர ஊழியர்களின் ஊதியத்தை விட, 1,200 மடங்கு அதிக ஊதியம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீட்டில் உள்ள, 15 நிறுவனங்கள், 2016 – 17ம் நிதியாண்டின் ஊதிய விபரங்களை, ‘செபி’யிடம் அளித்துள்ளன. அதில், தலைமை பொறுப்பில் இருப்பவருக்கும், நடுத்தர பதவியில் உள்ள பணியாளருக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு, மலைக்கும், மடுவுக்கும் உள்ளதை போன்று உள்ளது.
லுாபின் லேபரேட்டரிஸ் நிறுவனத்தின் தலைவர், நடுத்தர பணியில் உள்ளவரை விட, 1,263 மடங்கு அதிக ஊதியம் பெற்றுள்ளார். இது, 2015 – 16ம் நிதியாண்டில், 1,317 மடங்காக இருந்தது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, 217 மடங்கு அதிக ஊதியம் பெற்றுள்ளார். எல் அண்டு டி நிறுவன உயரதிகாரி, 2015 – 16ம் நிதியாண்டில், 1,004 மடங்கு கூடுதல் ஊதியம் பெற்றுள்ளார்.
டி.சி.எஸ்., நிறுவன தலைமை செயல் அதிகாரியின் ஊதியம், 515 மடங்கு அதிகமாக உள்ளது. பஜாஜ் ஆட்டோ தலைவர், 522 மடங்கு அதிக ஊதியம் பெற்றுள்ளார். ஐ.டி.சி., நிறுவன தலைவர், ஒய்.சி., தேவேஷ்வரின் ஊதியம், 427ல் இருந்து, 508 மடங்காக அதிகரித்துள்ளது. இவர், படிகள் உட்பட, 21.16 கோடி ரூபாய் பெற்றுள்ளார். அது போல, சிப்லா, 416 மடங்கு, பார்தி ஏர்டெல், 366, மகிந்திரா அண்டு மகிந்திரா, 108, இந்துஸ்தான் லீவர், 138, டாடா ஸ்டீல், 94 மடங்கு என்ற அளவிற்கு வித்தியாசம் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, பல ஆண்டுகளாக, 15 கோடி ரூபாய் ஊதியம் பெற்று வருகிறார். எனினும், 2014 – 15ம் நிதியாண்டில், இவரின் ஊதியம், நடுத்தர பதவியில் உள்ளவரை விட, 205 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|