பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
08:33
இந்த வாரம், இந்திய பங்குச் சந்தை வர்த்தகம், புதிய உச்சத்தை தொட்டுவிட்டு, சற்றே இறக்கம் கண்டு முடிந்தது. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, ‘நிப்டி’ மைல்கல் ஆன, 10 ஆயிரம் புள்ளிகளை, சந்தை எளிதில் கடந்தது.
இந்த சாதனை ஒருபுறம் இருக்க, அது நடந்த விதம், சந்தையின் பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது. பொதுவாக, சந்தையின் இத்தகைய சாதனைகள், பெரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தும். ஆனால், இம்முறை எந்த பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இன்றி, சந்தை புதிய உச்சத்தை தொட்டது.முக்கியமாக, தனியார் வங்கி நிறுவனங்களின் அபரிமிதமான காலாண்டு லாபக் கணக்குகள் ஏற்படுத்திய நம்பிக்கையின் அடிப்படையில், இந்த நிகழ்வு நடந்தது. இது, சந்தை நகர்வின் அடிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.
பண வரத்துதொடர்ந்து வெளி வரும் நிறுவனங்களின் காலாண்டு லாபக் கணக்குகளின் தாக்கம், சந்தையின் குறுகிய கால போக்கை நிர்ணயிக்கும் என்றாலும், சந்தையின் இந்த நகர்வுக்கு, பண வரத்தும் மிக முக்கிய காரணம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்திய சந்தையின் பண வரத்து, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பன்னாட்டு முதலீட்டாளர்களும், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களும், தொடர்ந்து நம் சந்தையில் முதலீடு செய்யும் சூழலே நிலவுகிறது.
பன்னாட்டு முதலீட்டாளர்கள், 2,223 கோடி ரூபாய்க்கும், உள்நாட்டு முதலீட்டாளர்கள், 2,640 கோடி ரூபாய்க்கும், இந்திய பங்குகளை, கடந்த வாரம் வாங்கினர். இருதரப்பும் வாங்கும் மனநிலையில் தொடர்ந்து இருப்பின், சந்தை பெரும் சரிவை காண்பது அரிது. பெரு முதலீட்டாளர்களின் பங்கு விற்பனையே இறக்கத்திற்கு வித்திடும். ஆனால், அதற்கான உடனடி அறிகுறிகள் உள்நாட்டு நிகழ்வுகளிலிருந்து தென்படவில்லை. இலக்கை விட குறைந்த பணவீக்கம், எதிர்பார்ப்பை விட அதிகமான காலாண்டு லாபம் காண்பிக்கும் நிறுவனங்கள், சந்தைக்கு வரும், 5,000 கோடி ரூபாய் மாதாந்திர சேமிப்பு, தனியார் வங்கிகள் தீர்வு காணும் வாராக்கடன் என, சந்தைக்கு சாதகம் தரும் பல அம்சங்கள் இருக்கின்றன. இனி வரும் மாதங்களில், பண வரத்து இதே போல் இருப்பின், சந்தை தொடர்ந்து புதிய உச்சங்களை கடந்து செல்ல வாய்ப்பு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
உயர்ந்துள்ளது
ஆனாலும், உலக சந்தையின் பார்வை என்ன என்பதை, நாம் கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். உலக சந்தையின் மதிப்பு, வரலாறு காணாத அளவு உயர்ந்து நிற்கிறது. இதை, உலக சந்தையின் வல்லுனரான, ஹவர்ட் மார்க்ஸ், மிகச் சிறந்த தன் கட்டுரையில் விளக்கி உள்ளார். மதிப்பு சாரா முதலீடுகளின் தாக்கம் எப்படி நஷ்டத்தில் முடியலாம் என்பதையும், சந்தையின் அச்சமின்மை ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் பற்றியும், குறிப்பிட்ட சில உலக பங்குகளில், எப்படி பணம் மிக அதிகமாக குவிந்திருக்கிறது என்பதையும், அதிக மதிப்பீட்டில் உள்ள அமெரிக்க சந்தையை விட்டு வெளியேற முதலீட்டாளர்கள் காட்டும் பிடிவாதத்தையும், மிகத் தெளிவாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த, 2008ல் இவர் எழுதிய கட்டுரை, வரவிருந்த அமெரிக்க சந்தையின் வீழ்ச்சியை, மிகத் தெளிவாக முன்னிறுத்தியது. இப்போது வெளி வந்திருக்கும் கட்டுரையும், உலக சந்தையில் இருந்து, நம் சந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை, முன்கூட்டியே நமக்கு அறிவுறுத்துகிறது. மார்க்ஸ் தொடுத்துள்ள வாதங்கள், அமெரிக்காவுக்கு மட்டுமல்ல; நம் சந்தைக்கும் பொருந்தும். நடைமுறையில், உலகம் ஒரு சந்தையாக இயங்குவதே, இதற்கு முக்கிய காரணம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|