பதிவு செய்த நாள்
06 ஆக2017
02:02
சென்னை:'ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றல் கொண்ட ஜவுளித் துறையை, மேலும் ஊக்குவிக்கும் விதத்தில், பிரத்யேக ஜவுளி கொள்கையை, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்' என, இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.எப்.ஐ.இ.ஓ., எனப்படும், இந்தியஏற்றுமதி கூட்டமைப்பின் பிராந்திய தலைவர், ஏ.சக்திவேல், 'ஜவுளித் துறை வளர்ச்சிக்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:'நாட்டின், மிக பழமையான தொழில்களில் ஒன்றாக, ஜவுளித் துறை உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜவுளித் துறையின் பங்களிப்பு, 4 சதவீதமாக உள்ளது.இத்துறையில், 3.50 கோடி பேர் பணிபுரிகின்றனர்; மேலும், எண்ணற்றோருக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய ஆற்றல், இத்துறைக்கு உள்ளது.
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன. ஆனால், சமீப ஆண்டுகளாக, அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் மற்றும் வியட்நாம் ஆகியவை, இந்திய ஜவுளி ஏற்றுமதிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளன.இப்போட்டியை சமாளிக்கும் வகையில், ஜவுளித் துறையை ஊக்குவித்து, ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏனெனில், இந்திய ஜவுளித் துறை, அயல்நாட்டு சந்தையை முழுவதும்சார்ந்ததாக உள்ளது. அதனால், இத்துறையின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஜவுளி தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும், புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தரவும், மாநில அளவில் ஓர் அமைப்பு தேவைப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.அத்துடன், உள்நாட்டில் ஜவுளித் துறையை ஊக்குவிப்பதற்கான, புதிய ஜவுளி கொள்கையும் அறிவிக்கப்பட வேண்டும். தமிழகத்தில், முழுமையான ஜவுளி பூங்காவை அமைக்கலாம்.ஜவுளித் துறையில், தமிழகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. தமிழக ஜவுளித் துறையில், ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது; இது, 2020ல், 75 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ஆகவே, தமிழக அரசு, ஜவுளித் துறைக்கு என, தனி கொள்கை வகுத்து, அதன்படி செயல்பட்டால், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழகம் முதலிடத்தை பிடிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அன்னிய செலாவணி
இந்திய ஜவுளித் துறை, 2025ல், 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுத்து, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னிய செலாவணியை ஈட்டும்.- பி.சி.ஜி., ஆய்வறிக்கை
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|